பினாங்கை இழந்ததற்கு அம்னோதான் காரணம்

 

Teng14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பாரிசான் பங்காளித்துவக் கட்சிகள் கடந்த கால தோல்விகளுக்கு ஒருவர் மற்றொருவரை குறைகூறத் தொடங்கி விட்டனர்.

பினாங்கு பாரிசான் கட்சிகள் எல்லாவற்றுக்கும் அம்னோவை நம்பி இருப்பதாகத் தெரிகிறது என்று இன்று அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியதால் பினாங்கு பாரிசான் தலைவர் தெங் சாங் இயோ எரிச்சலடைந்துள்ளார்.

அம்னோவின் தேர்தல் இயந்திரம் மிக ஆற்றல் மிக்கது என்பதை மறுக்க முடியாது என்று ஏளனமாக கெராக்கான் மாநிலத் தலைவருமான தெங் கூறினார்.

“அவர்கள் இயந்திரம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அவர்கள் கிளந்தானையும் சிலாங்கூரையும் மறுபடியும் வெற்றிகொள்ள முடியவில்லை”, என்று தெங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலின் போது ஸாகிட்தான் இடைத் தேர்தல் நடவடிக்கையின் கூட்டு-இயக்குநராக இருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டிய தெங், அம்னோ பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றார்.

2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் நாம் ஏன் பினாங்கை தோற்றோம் என்பது ஸாகிட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றாரவர்.

நாம் பினாங்கை தோற்றதிற்கு இயந்திரமோ ஒற்றுமையோ காரணமல்ல. அம்னோதான் காரணம் என்று தெங் மேலும் கூறினார்.

இது நன்கு தெரிந்த உண்மை. இதை நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்றால், நாம் தொடர்ந்து தோல்வியடைவோம் என்றார் தெங்.

இது குறித்து தெங் முழு விளக்கம் அளிக்கவில்லை என்றபோதிலும் அம்னோ தீவிர வலச்சாரிகளுக்கு அளித்த ஆதரவால் மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் கெராக்கான், எம்சிஎ மற்றும் மஇகா ஆகிய கட்சிகள் அம்னோவின் இனவாத அரசியலை ஆதரிப்பதாக கருதினர் என்பது தெரிந்த ஒன்றே.

பழையதை நோண்டிக் கொண்டிருக்க வேண்டியதில்ல. தவறை திருத்திக் கொண்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்றார் தெங்.