மலேசியாகினியில் எம்சிஎம்சியின் திடீர்ச்சோதனை, இரண்டு கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

 

MKraidமலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் இன்று பின்னேரத்தில் மலேசியாகினியில் திடீர்ச்சோதனையை மேற்கொண்டு இரண்டு கணினிகளை பறிமுதல் செய்தது.

கடந்த ஜூலையில், கினிடிவி இரண்டு வீடியோக்களை பதிவேற்றம்   செய்திருந்தது. அது குறித்து தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்எ) செக்சன் 233 (1) இன் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக இந்த தீடீர்ச்சோதனை நடத்தப்பட்டது.

அந்த இரு வீடியோக்களும் – ஒன்று மலாய் மொழியில் மற்றொன்று ஆங்கில மொழியில் – பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தில் (எம்எசிசி) ஒரு புகார் செய்த பின்னர் நடத்திய செய்தியாளர் கூட்டம் பற்றியதாகும்.

கைருடின் நடத்திய அச்செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்துறை தலைவர் முகம்மட் அபாண்டி அலியை குறைகூறிய கைருடின், 1எம்டிபி விவகாரத்தில் வழக்குத் தொடர மறுத்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரியிருந்தார்.

எம்சிஎம்சி அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் தலைமையில் வந்திருந்த குழுவினர் மலேசியாகினியில் 6 மணி நேரத்தைக் கழித்த பின்னர் இரண்டு கணிகளுடன் திரும்பிச் சென்றனர்.

அந்த இரு வீடியோக்களுக்கு எதிரான புகாரை சட்டத்துறை அலுவலகம் செய்ததாக எம்சிஎம்சி தெரிவித்தது.

பொதுநலன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை வெளியிட வேண்டியது செய்தியாளர்களின் கடமை. அந்த அடிப்படையில் மலேசியாகினி அவ்விரு வீடியோக்களை பதிவேற்றம் செய்தது என்று மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் எம்சிஎம்சி அதிகாரிகளிடம் கூறினார்.