அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக  2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.

இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள்  பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதன் முற்கூட்டிய பிரதியை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

அதில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசு இழுத்தடிப்புச் செய்வதாகவும், இதனால்,  மாற்று வழிகள் குறித்து  பரிசீலிப்பதற்கு உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைப்படி, ஜெனிவா தீர்மானத்தை  நடைமுறைப்படுத்தவதற்கான அழுத்தத்தை அதற்குக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

இதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்  ஐ.நாவுக்கான அமெரிக்காவின்  நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயையும்,  அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயுடனான சந்திப்பு வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ்  வெல்ஸ்சுடன்,  செவ்வாய்க் கிழமை சுமந்திரன் பேச்சு நடத்தவுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

“சிறிலங்கா பொறுப்புக் கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.

எனவே அதனைச் செய்வதற்கு அமெரிக்க தலைமையேற்க வேண்டும். போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதனையே நான் வலியுறுத்தவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: