நீதிமன்ற வழக்கின் வழி, இருமொழித் திட்டம்  அகற்றப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் மீதும் கல்வி அமைச்சின் மீதும் இருமொழித் திட்டத்தை அகற்றக் கோரி போடப்பட்ட வழக்கு நேற்று (16.4.2018) ஒரு முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக அந்தத் திட்டம் அப்பள்ளியில் இருந்து அகற்றப்பட்டது.

இது தமிழ்வழிக் கல்விக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென மே 19 இயக்கத்தினரும் தமிழ் எங்கள் உயிர் குழுவினரும் அறிவித்துள்ளனர்.

கடந்த வருடம் செம்டம்பர் மாதம் கோலாலம்பூர் உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சீராய்வு மனு, அதன் முதல் கட்ட வெற்றியாக 28.9.2017-இல் நீதிமன்றச் சீராய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் தொடர்பாக நடந்த வழக்கின் முழுமையான செவிமடுப்பு நேற்று தொடங்கியது.

முழுமையான விசாரணை கோரிய இரண்டு தரப்பினரும், அந்தத் திட்டம் அப்பள்ளியில் 2018-இல் அகற்றப்பட்டு விட்டதால் அதன் சார்பான விசாரணை தேவையற்றது என்று ஒருமித்த முடிவை நீதிபதி டத்தோ ஹஜா அசிசா பிந்தி நவாவியின் முன் நிறுத்தினர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அந்தத் திட்டம் மீண்டும் அமுலாக்கச் செய்ய முற்பட்டால் மீண்டும் வழக்கைத் தொடர அனுமதியையும் வழங்கினார்.

விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான வழக்கின் வாதிகள்: 1. என். இராஜரெத்தினம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்), 2. செ. செல்வம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர்), 3. கா. ஆறுமுகம் (மலேசிய இந்திய அரசுசாரா அமைப்புகளின் ஆலோசகர்) மற்றும் ஒரு பெற்றோர் என இவ்வழக்கைப் பதிவு செய்த வழக்குரைஞர் தினகரன் விளக்கமளித்தார்.

இவ்வழக்கின் பிரதிவாதிகள்: 1. மு. பஞ்சினியம்மாள் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்), 2. தலைமை இயக்குனர், கல்வி அமைச்சு, மலேசியா, மற்றும் 3. கல்வி அமைச்சர் ஆகும். இவர்களின் சார்பாக அரசாங்கத்தின் மூத்த வழக்குரைஞர் நட் ரா பிந்தி இட்ரிஸ் வழக்கை நடத்தினார்.

தமிழ்வழிக் கல்விக்கு வழிவகுக்கும் தமிழர்களின் ஒரே காப்பமகா இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு, பலவகையான அதிரடி நடவடிக்கைகளைத் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் எடுத்து வருகின்றனர்.

மலேசியாவில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளமாகக் கட்டிக்காக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்வழி கல்வியைக் கட்டிக்காக்கத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும். அதை விடுத்துத் தமிழ்வழிக் கல்வியை மாற்றம் செய்யும் வகையில் உள்ள இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்ய இவர்களுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது, சட்டத்தின் வழியாகக் கடப்பாடும் இல்லை, கல்வி அமைச்சும் அவர்களை வற்புறுத்தவில்லை. அதன் சாரம் இந்த வழக்கில் உள்ளதைத் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும்,  2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்த அனைத்து 47 தமிழ்ப்பள்ளிகளுக்கும், முறையாகக் கடிதம் அனுப்பப் பட்டது. அந்தக் கடிதத்துடன் மலேசியக் கல்வி அமைச்சின் துணை இயக்குனர் அவர்கள் வழங்கிய கடித நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அதன் சாரம் என்னவென்றால், இருமொழித் திட்டம் அமுலாக்கப்ப்ட வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது, பள்ளிகள் அதில் இருந்து வெளியாகத் தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என்பதாகும்.

மீண்டும் 2018-ஆம் ஆண்டு தொடங்கியவுடன், 40 பள்ளிகளில் இருமொழித் திட்டம் தொடரப்பட்டது. 2017-இல் அனுப்பப்பட்ட கடித்ததைப் புறக்கணித்ததால், 2018-இல் இந்தப் பள்ளிகளுக்கு வழக்கறிஞர் கடிதம் அனுப்பப்பட்டதாக இக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்வழிக் கல்வியை நமது பள்ளிகள் இழந்தால் அதன்வழியான பாதிப்புகளைப் பின்பு நிவர்த்தி செய்ய இயலாது. எனவேதான், இந்த 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மீதும் அவர்களின் பெயரிலேயே இந்தச் சட்ட நடவடிக்கையை எடுக்கும் இக்கட்டான சூழல் உருவானது என்கின்றனர் தமிழ் எங்கள் உயிர் குழுவினர்.

இந்தச் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டுமானால், அதற்குத் தலைமையாசியர்கள்தான் முன்வர வேண்டும். அதை விடுத்து, அவர்கள் மாற்று வழிகளையும் கடைபிடிக்க முற்படும் போது அவர்கள் தமிழ்ப் பள்ளியின் ஒரு தலைமையாசிரியர் என்ற வகையில் கொண்டுள்ள தார்மீகக் கடமையில் இருந்து விலகுவதோடு கல்வி சட்டதிற்கு புறம்பாகவும் நடந்துகொள்வதாக இக்குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று இந்தக் குழுவினர் அறிவித்துள்ளனர்.