அலைமகன்

இறுதி விடுமுறையில்
வீடு வருகையிலிட்ட
முத்தங்களின் நினைவிலுழல்கிறது
நீ வளர்த்த நாய்

கந்தகப் புகையால்
வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்
நுழைந்துவிட்ட அம்மா
இன்னும் திரும்பவில்லை

ஓர் நள்ளிரவில்
நமது கடலில் நீ வெடிக்கையில்
அடித்திற்றுப் பெருமின்னல்

வெற்றிச்செய்தியாய் மாத்திரம்
வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால்
இன்னும் சில முத்தங்களையேனும்
இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா

இறுதித் தேநீரருந்திய
கோப்பையில் ஒட்டியிருக்கிறது
உன் புன்னகையினொரு துளி

நீ வெடித்த கடலில்
ஒரு மண்கோப்பை நீரெடுத்து
தாகம் நிரம்பியவுன் முகத்தைப்
பார்த்துப் பேசுகிறாள் அம்மா

அலைகளில் எழுமுன் பெயரை
உச்சரிக்கா
நாளில்
இப் பெருங்கடல்
வற்றிப் போயிருக்கும்.

-தீபச்செல்வன்
TAGS: