சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’

விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த படம் சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. கவிஞர் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

உலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.

இப்போது ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் படத்தையும் தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில் புச்சியான் சர்வதேச திரைபட விழா நடந்தது. இந்த விழாவில் விஜய்யின் மெர்சல் படத்தை ஆசியாவின் சிறந்த படங்கள் வரிசையில் ஒன்றாக தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

-dailythanthi.com