பாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது திறந்துள்ளது

செப்டம்பர் 9-ல், ஶ்ரீ செத்தியா இடைத்தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், பாஸ்-க்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி, அம்னோவிடமிருந்து ஆதரவும் உதவியும் கிடைத்துள்ள வேளையில், தற்போது மஇகாவும் பாஸ்-க்கு உதவ முன்வந்துள்ளது.

இன்று, ஜாலான் ராஜா லாவுட்டில், இபாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் மற்றும் மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பிற்குப் பின்னர், இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

பாஸ் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், பரஸ்பர நன்மை கருதி, மஇகா பல்வேறு அம்சங்களில் பாஸ்-உடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது, ஶ்ரீ செத்தியா இடைத் தேர்தல் பிரச்சாரம் உட்பட என்று, பாஸ் தலைவரின் அரசியல் செயலாளர் ஷாஹிர் சுலைமான் தெரிவித்தார்.

“நாட்டு மக்களின் நலன் மற்றும் இன ஒற்றுமை விவகாரங்களில், ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கும் மஇகாவின் திறந்த மனப்பான்மையைப் பாஸ் வரவேற்கிறது,” என்றார் அவர்.

மஇகாவுடனான இன்றைய சந்திப்பில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், தலைமைச் செயலாளர் தகியுடின் ஹஸ்சான், பாஸ் ஆதரவாளர் மன்றத் தலைவர் என். பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர் என ஷாஹிர் தெரிவித்தார்.

மஇகா சார்பில், அதன் துணைத் தலைவர் எஸ் கே தேவமணி மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.