இலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளுக்கு ஏற்ப தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாமல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட மனித புதைக்குழி பகுதிக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி பாலித்தீன் தாளால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, மன்னார் பகுதி வீடு ஒன்றில் கொட்டியபோது அதில் மனித எச்சங்கள் இருந்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இலங்கை
இலங்கை

அதன் பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் தேதி முதல் முறையாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றனர். -BBC_Tamil

TAGS: