விஸ்மா புத்ரா தயவில் ஷாபி தூதரகக் கடப்பிதழை வைத்துள்ளார்- குடிநுழைவுத் துறை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா தூதரகக் கடப்பிதழை வைத்திருக்கிறார். அதில்தான் அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வந்துள்ளார். அவருக்கு எப்படி தூதரகக் கடப்பிதழ் கிடைத்தது?

அதற்குக் காரணம் விஸ்மா புத்ரா( வெளியுறவு அமைச்சு) என்கிறார் குடிநுழைவுத் துறைத் தலைவர் முஸ்டபார் அலி.

“தூதரகக் கடப்பிதழ் வழங்கும் அதிகாரம் விஸ்மா புத்ராவுக்குத்தான் உண்டு. அது ஒருவருக்கு அங்கீகாரம் கொடுக்கும்போது அன்னாருக்குக் குடிநுழைவுத் துறை தூதரகக் கடப்பிதழை வழங்குகிறது”, என முஸ்டபார் கூறினார்.

2016-இல் அரசாங்கம் ஈராண்டுக் காலத்துக்கு தன்னை மனித உரிமை தூதராக நியமித்தபோது தூதரகக் கடப்பிதழ் வழங்கப்பட்டதாக ஷாபி கூறியதாக நேற்று த ஸ்டார் அறிவித்திருந்தது.

ஷாபி நேற்று பினாங்குக்குப் பயணப்படவிருந்த வேளை சுபாங் சுல்தான் அப்துல் அசீஸ் ஷா விமான நிலையத்தில் எம்ஏசிசி-ஆல் கைது செய்யப்பட்டார்.