பட்ஜெட்டில்  இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகளோடு ஓர் ஒப்பீடு – கா. ஆறுமுகம்

பக்காத்தான் ஹராப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மிக முக்கியமான பகுதியாகும். மிகவும் கவனமாக தொடர்ந்து இந்தியர்கள் தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இருந்து விலகாமலிருக்க 25 வாக்குறுதிகளை  நம்பிக்கை கூட்டணி அந்தச் சிறப்பு பகுதியில் இணைத்திருந்தது.

இவற்றை மலேசியஇன்று கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  இந்தியர்களின் சிக்கல்களை தீர்க்க வழிமுறைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதன் அடிப்படையில் மலேசியாஇன்றுவின் இந்த ஆய்வு அமைகிறது.

வாக்குறுதி 1 – நாடற்றவர்கள் பிரச்சனை

பட்ஜெட்டில் என்ன உள்ளது? இது பட்ஜெட் சார்புடையது அல்ல.

வாக்குறுதி 2 –  நாட்டு வீடமைப்பு கொள்கையில், இந்தியர்களின் வீட்டுடமை தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் கொள்கைகளில் மாற்றம் செய்தல்.

முன்னாள் தோட்டப் பாட்டாளிகள் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பி-40 சார்ந்த மக்கள் என அடையாளம் காணப்படுபவர்களை வாடகையின் வழி வீட்டுக்கு உரிமையாளர் ஆக்குதல்.

தரமான வீடுகளை, நியாயமான விலையில் அவர்கள் பெறுவதையும், ஊதியத்திற்கு ஏற்பக் கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் உறுதி செய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – பொதுவாக வீட்டுடமைக்காக ரிம1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு மாத வருமானம் ரிம 2,500 க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு உதவ பேங் நெகார வழி ரிம 1 பில்லியன் கடனுதவு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் வழி இந்தியர்கள் எப்படி பயன் அடைவார்கள் என்ற விளக்கம் தேவை.

வாக்குறுதி  3 – இந்தியர்கள், முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், அதிகம் வாழும் இடங்களில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்களில் வருமானத்திற்கு ஏற்ற விலையில் வீடுகள் மற்றும் குறைந்த விலை வீடுகள் அதிகம் கட்ட, வீடமைப்பு நிறுவனங்களை நிர்பந்திக்கும் கட்டுப்பாடுகளையும் விதிகளையும், மாநில அரசுகளும் ஊராட்சி மன்றங்களும் அமல்படுத்துவதைப் உறுதிப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இதைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை.

வாக்குறுதி 4 – அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் தேசியமொழிப்பள்ளிகளுக்கு ஈடாகத் தரம் உயர்த்தி, அனைத்தையும் அரசாங்கப் பள்ளிகளாகப் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை. தமிழ்ப்பள்ளிக்கு ரிம் 50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அரையும் குறையுமாக பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அவசர நிதி வேண்டும்.

வாக்குறுதி 5 –  அரசாங்கத் தமிழ் இடைநிலைப்பள்ளிகள் நிறுவுவதையும் உறுதிப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 6 – இந்திய மாணவர்களுக்கு அதிகக் கல்வி வாய்ப்புகளை அளிக்கும் வண்ணம், எஸ்.பி.பி (Sekolah Berasrama Penuh) எனப்படும் நாடு முழுவதிலும் தங்கும் வசதிகளைக் கொண்ட பள்ளிகள் மற்றும் எம்.ஆர்.எஸ்.எம் (MSRM) எனப்படும் மாரா விஞ்ஞானக் கல்லூரிகளில் தோட்டப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 7 –  எஸ்.பி.பி., எம்.ஆர்.எஸ்.எம் எனும் இரண்டுவிதக் கல்விக்கூடங்கள் தவிர, தங்கும் விடுதிகளைக் கொண்ட இதர வகையானப்பள்ளிகளும் இந்திய மாணவ-மாணவிகளுக்கு அதிக இடமளிக்கும் வண்ணம் விஸ்தரிக்கப்படுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 8 – நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாடுகளிலும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றுப் பயனடையும் வண்ணம், தொழிற்திறன், தொழில்நுட்ப வேலைகளுக்கான முன்னனுபவப் பயிற்சிகளும் பட்டறைகளில் வாய்ப்புகளும் வழங்கி, அவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இதற்காக ரிம100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

வாக்குறுதி 9 –  இந்திய இளைஞர்களிடம் வேரூன்றியுள்ள போதைப் பொருள், மது, குண்டர் கும்பல் போன்ற கலாச்சாரங்களைத் துடைத்தொழித்து, அவர்களை நல்வழிப்படுத்தும் வண்ணம் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை வரைந்து அதன்வழி இந்திய இளைஞர்கள் மேற்கண்ட தவறான பழக்கங்களிலிருந்து முற்றாக விடுபடுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை

வாக்குறுதி 10 – குறைந்தபட்ச ஊதியமாக, ரிங்கிட் 1,500-ஐ ஹரப்பானின் ஆட்சிக்கால முதல் தவணையிலேயே அறிமுகப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இதற்கு முன்பு ரிம1050 ஆக இருந்த குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரிம1100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்குறுதி 11 – அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்கள், நகராட்சி, மாநில மற்றும் மத்திய அரசின் ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கு புதிதாகப் பணியில் அமர்த்தப்படுபவர்களில் 10 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு ஆணையிடப்படுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 12 – பொருளாதாரத் துறையில் இந்தியர்களின் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்தவும் அவர்களைத் தொழிற்துறைகளில் ஈடுபடுத்தவும் உதவ :-

முதல் 10 ஆண்டுகளில் இந்தியர் சமூக பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு, ரிம400 கோடிக்கான  சிறப்பு நிதி ஒதுக்குதல். இந்த நிதி உடனடியாகச் செயல்படுவதற்கு வசதியாக, அதற்கு அரசின் மானியமாக ரிம100 கோடியை ஒதுக்கீடு செய்தல். எஞ்சியவை அரசாங்கத்தின் துணை நிறுவனங்கள் வழி திரட்டப்படும். இது முழுமையாக இந்தியப் பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு ‘சிந்தா’ எனப்படும் சிங்கப்பூர் நிதியமைப்பு நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இந்த பட்ஜெட்டில் ரிம100 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் இல்லை.

வாக்குறுதி 13 – இந்துக்களுக்கான அறநிதி வாரியமொன்று பினாங்கு அறநிதி வாரியத்தைப் போல், அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்படும். முதல் கட்டமாக, சிலாங்கூர், கெடா, பேராக், பஹாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் அமைத்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இது பட்ஜெட் சார்புடையது அல்ல. மேலும் இது தேவையா என்ற விவாதமும் உள்ளது.

வாக்குறுதி 14 –  தனித்து வாழும் இந்தியத் தாய்மார்களுக்கானப் பயிற்சி, பட்டறைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். அவர்கள் வாழ்க்கை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கானச் சிறப்பு தொழில் பயிற்சிகளை வழங்க முழுநேரப் பயிற்சியாளர்களைக் கொண்ட திட்டங்களை வகுத்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 15 – வீட்டிலிருந்து சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இந்தியர்களுக்கு, குறிப்பாக மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு, ஊக்குவிப்பு வழங்க மைக்ரோ கிரேடிட் மற்றும் சிறு வணிகக் கடன் உதவித் திட்டங்களையும் உருவாக்குதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 16 – அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகள் காட்டப்படுவதைத் தடுக்க ‘சரிநிகர் வேலை வாய்ப்பு கமிஷன்’ என்ற ஓர் ஆணையத்தை அமைத்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இது பட்ஜெட் சார்புடையது அல்ல

வாக்குறுதி 17 – இந்தியர்கள் ஃபெல்டா, ஃபெல்கிரா போன்ற நிலத் திட்டங்கள் மற்றும் இதர வகையான விவசாய, கால்நடை வளர்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் நிதியையும் வழங்குதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 18 – இந்தியர்கள் அதிகம் சார்ந்துள்ள தொழில் துறைகளான வாகனப் போக்குவரத்து மற்றும் மறுசுழற்சி  போன்ற தொழில்களுக்கான அனுமதி மற்றும் உரிமம் வழங்குவதை எளிமையாக்கி ஊக்குவித்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – எதுவும் இல்லை.

வாக்குறுதி 19 – இந்து ஆலயங்கள் கட்ட மற்றும் இடுகாட்டுக்கான நிலங்கள் வழங்குவதில் மிகத் தாராளமாக நடந்துகொள்ளுதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இது பட்ஜெட் சார்புடையது அல்ல.

வாக்குறுதி 20 – இந்து ஆலயங்கள் மற்றும் இடுகாடுகள் இடம்பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் அல்லது நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்குவதை உறுதிப்படுத்துதல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இது பட்ஜெட் சார்புடையது அல்ல.

வாக்குறுதி 21 – இந்தியர்களுக்கு சிறையில் ஏற்படும் மரணம் குறித்து புலன்விசாரணை செய்யவும் போலீசாரின் அத்துமீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும் போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் அமைத்தல். பக்காத்தான் ஹராப்பான் அரசின் முதல் தவணையிலேயே இது அமைக்கப்படுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது ? – சட்டதிருத்தம் மற்றும் அமலாக்க வழிமுறை சார்ந்த இவற்றை மாற்றம் செய்ய அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாக்குறுதி 22 – இப்போது அம்னோ-பாரிசான் அரசின் அமைச்சுகள் இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் ஏழ்மை மற்றும் சமூகச் சீர்கேடுகள் மீது காட்டும் அலட்சியப் போக்குக்கு முடிவு கட்டி, மேற்கண்ட விவகாரங்கள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சுகள், உதாரணமாக நகர்ப்புற நல்வாழ்வுத் துறை மற்றும் புறநகர் மேம்பாட்டு அமைச்சு, ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்படுவதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது ? – இது சார்பாக பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுத் துறைக்கு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்வழி இப்பிரச்சனைகள் கையாளப்படும் என நம்பலாம்.

வாக்குறுதி 23 – நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் பயன்பாட்டைக் குறைத்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – திறன் குறைவான தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். லெவி கட்டணம் உயர்த்தப்படுவதின் வழி அதன் பயன்பாட்டை குறைக்கும் வழிமுறை கையாளப்படும்.

வாக்குறுதி 24 – இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தோட்டப்புறங்கள் உட்பட, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த இலவச மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது ? – 40% கீழ்மட்ட வருமானம் பெருபவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழி ரிம 8,000-க்கு மருத்துவ சேவையும், 14 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கும் போது நாள் ஒன்றுக்கு ரிம50 என்ற வகையில் ரிம700 வரை உதவியும் கிடைக்கும்.

வாக்குறுதி 25 – இந்தியச் சமுதாயத்தில் தாய் அல்லது தந்தை எவரேனும் ஒருவரின் சம்மதத்துடன் இளம் வயதினர் மதம் மாற்றப்படும் இடர்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு அமைதியான நல்லிணக்க அடிப்படையில், உடனடியானத் தீர்வு காண தக்க நடவடிக்கை எடுத்தல்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது? – இது பட்ஜெட் சம்பந்தப்பட்டது அல்ல. இவை சார்ந்த வழக்குகள் தற்போது ஒரு புதிய கண்ணோட்டதுடன் அரசாங்கத்தால் கையாளப்படுகின்றன.