இராணுவமும் பொலிஸூம் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைக்க நேரிடும்; யாழ். கட்டளைத் தளபதி அச்சுறுத்தல்!

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின், இராணுவத்தினரும் பொலிஸாரும், வீதிகளில் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தைப் பொதுமக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “சிங்கள மக்களும் இராணுவத்தினரும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர். யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில், தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள். யுத்த காலத்தில் துன்பட்ட தமிழ் மக்களின் வாழ்வை, இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும். எனவே, இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என, தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், பொலிஸைச் சேர்ந்தவர்களும் இராணுவத்தினரும், வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து, வீதியில் செல்வோரை வழிமறித்துச் சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும். அதனால், இந்த அமைதியான வாழ்வை வாழ வேண்டும்.

இராணுவத்தினருடன் இணைந்து, தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால், அவர்களுக்குத் தமிழ் மக்கள் தைரியம் கொடுக்காது, அவர்களை வலுவிழக்கச் செய்து, நாட்டின் அமைதியைப் பேண வேண்டும்.

நான் கூறுவதை நம்புங்கள். நான் எனது மனதில் தோன்றுவதைச் சொல்கிறேன். அதனால் நாம், ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம். இராணுவத்தினர் ஆகிய நாம், இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு, எதிர்காலத்தில் அரசியல் நோக்குடன் வாக்குக் கேட்டு, இந்த வேலைத்திட்டங்களைச் செய்யவில்லை. யாழில் வாழும் தமிழர்கள், அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்”என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: