அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என கோரிக்கையை ஏற்க முடியாது – மலேசிய நாம் தமிழர் இயக்கம்

கடந்த மாதம் சீபில்ட் மாரியம்மன் திருக்கோவில் கலவரத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணமடைந்ததை தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ. வேதமூர்த்தி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுப்பதும் அவருக்கு எதிராக மறியலில் ஈடுபடுவதும் அடிப்படையற்றது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது என மலேசிய நாம் தமிழர் இயக்கம் கருதுவதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் பற்றி பேசுபவர்கள் கலவரத்திற்கு காரணமாக அத்துமீறி கோவிலில் நுழைந்து தாக்கியவர்களை பற்றி பேசுவதில்லை. முகமட் அடிப் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, தாங்க முடியாத சோகம், அதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக இதில் அமைச்சர் பொ. வேதமூர்த்தியை தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதும் பதவி விலக சொல்வதும் தேவையற்றது என்றார்.

ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரான பொ. வேதமூர்த்தி அவர்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்த அனைத்துவிதமான இனரீதியான பாகுபாடுகளை களையும் (ஐசெர்ட்) தீர்மானத்தை முன்மொழிந்த எதிரொலியாகவும் சிறும்பான்மை இனத்திற்கு எதற்கு 4 அமைச்சர்கள் என்ற பெர்காசா எனும் தீவிரவாத அமைப்பை சார்ந்த இப்ராகிம் அலி எழுப்பிய கேள்வியின் தொடர்ச்சியேதான் அமைச்சர் பொ. வேதமூர்த்தி பதவி விலக சொல்லும் கோரிக்கை, கையெழுத்து வேட்டை மற்றும் மறியல் போன்ற திட்டமிட்ட சதிகலாகும் என்றார் வீ. பாலமுருகன்.

அதிலும் 14வது பொது தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பெர்சாத்து எனும் கட்சியின் வழி மிக எளிதாக அமைச்சரவையில் புகுந்த பெர்சாத்து இளைஞர் பகுதி தலைவரும் விளையாட்டு துறை அமைச்சருமான சயிட் அவர்களும் அமைச்சர் பொ. வேதமூர்த்திக்கு எதிராக மனு வழங்கியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. அவர் அமைச்சர் பொ. வேதமூர்த்தி அவர்கள் கடந்து வந்த பாதையை சற்று அலசி பார்க்க வேண்டும். இன்று இருக்கும் எதிர்கட்சியான தேசிய முன்னணி அப்போது ஆளுங்கட்சியாக அங்கம் வகித்த போது தான் முன்வைத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை வாக்களித்தபடி நிறைவேற்றாததால் தனது துணை அமைச்சர் பதவியை தூக்கெறிந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து, பிரதமருக்கு சுமையை ஏற்படுத்தாமல் பொ. வேதமூர்த்தியே விலக வேண்டும் என்ற மூத்த பத்திரிக்கையாளர் காடிர் ஆசின் அவர்கள், இதேபோல் அன்று மங்கொலியா மாடல் அழகி அல்துனையாவை வெடிகுண்டு பயன்படுத்தி படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளின் செயலை பொறுப்பேற்று அன்றைய காவல் படை உயர் அதிகாரியை ஏன் பதவி விலக சொல்ல வில்லை.? அல்லது வெடிகுண்டு பயன்படுத்தி மலேசிய திருநாட்டின் நற்பெயர் மாசுபட்டதற்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சரை ஏன் பதவி விலக சொல்ல வில்லை.? இந்த வழக்கில் தொடர்புப் படுத்தப்பட்ட முன்னாள் பிரதமரை தாங்கள் குற்றவாளி அல்ல என்று நிறுபிக்கும் வரை  பதவி விலக வேண்டும் என இதேபோன்று செய்தி வெளியிட்டதாக இதுவரை செய்தியில்லையே..

அதெப்படி, தன் இனமென்றால் வாய்மூடி அமைதி காப்பது, மாற்று இனமென்றால் எதிர்ப்பது. எந்த விதத்தில் இது சமத்துவம். மூவினமும் ஒற்றுமையாக வாழும் இத்தேசத்தில் இப்படியான குறுகிய சிந்தனைகளை வளர விடக்கூடாது.

மலேசிய நாம் தமிழர் இயக்கம் அமைச்சர் பொ. வேதமூர்த்தி அவர்களுடன் சில கருத்து முரன்பட்டாலும் தமிழனென்று வரும் போது யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்காது, இச்சிக்கலுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் துணை நிற்கும் என இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு. பாலமுருகன் வீராசாமி கூறினார்.