சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்; போலீசார் வெளியிட்ட வீடியோவால் அம்பலம்!

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பது போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர்.

18-ம் படி ஏறாமல் பின்பக்க பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நடை மூடப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது.

சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

இந்தநிலையில் இன்று இலங்கை காரத்தீவைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா (வயது 47) என்பவர் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த தகவல் வெளியானதும் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மரக்கூட்டம் பகுதியில் இலங்கை தமிழ் பெண் சசிகலாவை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். அப்போது அவர் சபரிமலை சென்றது உண்மை. ஆனால் 18-ம் படி ஏறவில்லை. சாமி தரிசனமும் செய்யவில்லை என்றார். தன்னுடன் வந்த கணவரும், குழந்தையும் மட்டுமே 18-ம் படியேறி தரிசனத்துக்கு சென்றதாக கூறினார்.

இதனால் இலங்கை தமிழ் பெண் சன்னிதானம் சென்ற 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கண்காணிப்பு காட்சிகள் மற்றும் ஊடகங்கள் பதிவு செய்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சசிகலாவின் கணவரும், அவரது மகனும் இன்று காலையில் சன்னிதானம் வழியாக செல்லும் காட்சிகள் காணப்பட்டது. அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு சசிகலா தனியாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதுபற்றி போலீசாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர்கள் அதை மறுக்கவில்லை. மாறாக இலங்கை பெண் சசிகலாவுக்கு 47 வயதே ஆவதால் அவரை போராட்டக்காரர்கள் தடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால் மறுப்பு தெரிவித்து கூறியதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்களுக்கு பயந்தே சசிகலாவும் சாமி தரிசனம் செய்ததை மறுத்ததாகவும் கூறப்பட்டது.

சசிகலாவுக்கு 47 வயதே ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர். அதற்கான மருத்துவ சான்றிதழையும் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காலையில் தரிசனம் செய்த சசிகலா, போலீஸ் பாதுகாப்புடன் பம்பை சென்றார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மற்றொரு போலீஸ் குழுவுடன் அவர் மின்னல் வேகத்தில் கொச்சி விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டார். சசிகலா புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகே அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை போலீசார் வெளியிட்டனர். இதன் மூலம் சசிகலாவை போலீசார் திட்டமிட்டே சன்னிதானம் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இலங்கை பெண் தரிசனம் செய்ததை உறுதி செய்த போலீசார் அவர் 18-ம் படி ஏறினாரா? என்பதை கூற மறுத்தனர்.

இதற்கிடையே இன்று சபரிமலை சென்ற திருநங்கை ஒருவரும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவரது பெயர் கயல்.

சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற அவரை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தியதால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பினார்.

-athirvu.in

TAGS: