‘நானும் அவரும், ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்’

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரும் தானும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேச ஒப்புக்கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார்.

“அவருடன் நேரடியாக என்னால் தொடர்புகொள்ள முடியும். இரகசியம் ஏதுமின்றி, வெளிப்படையாக பேச நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

“அவருடையக் கருத்தை அவர் சொன்னார், என்னுடையக் கருத்துகளை நான் முன்வைத்தேன்,” என்று சீனாய் அனைத்துலக விமான நிலையத்தில், இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னதாக இன்று, ஜொகூர் பாருவில், புக்கிட் செரீன் அரண்மனையில், மகாதிர் ஜொகூர் சுல்தானைச் சந்தித்தார்.

அச்சந்திப்புக்குப் பின்னர், புரோட்டன் ரக காரின் முதல் வெளியீடான புரோட்டோன் 1, நீலநிறக் காரில், மகாதீரைச் சீனாய் விமான நிலையத்திற்கு, சுல்தானே அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்களின் கலந்துரையாடல் பற்றி கேட்டபோது, நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி பேசியதாக மகாதிர் தெரிவித்தார்.

“மக்கள் சுல்தானைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொன்னேன், அவர் அதை நல்லமுறையில் ஏற்றுக்கொண்டார்.

அடுத்த பேரரசர் நியமனம் பற்றி கேட்டபோது, “அது அரசர்கள் பிரச்சனை, எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை,” என்றார் அவர்.

சுல்தான் இப்ராஹிமைக் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்ததாகவும், தற்போது புதிதாக அப்பதவியில் அமர்ந்து, ஜொகூர் சுல்தானைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் மகாதிர் கூறினார்.