அமெரிக்க அரசாங்க முடக்கம் : ‘நேரம்தான் வீண்’ கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்

அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேறியுள்ளார்.

அதிபர் நிதானம் இழந்து பேசுகிறார் என மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது ஜனநாயக கட்சி.

அமெரிக்காவில் பகுதியளவு அரசாங்கம் முடக்கம் துவங்கியபிறகு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சம்பள நாள் வருகிறது. சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கும் நாளை தினம் ஊழியம் வழங்கப்படாமலேயே கழியும்.

டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தாம் அதிபரானால் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே எல்லைச்சுவர் எழுப்புவேன் எனத் தெரிவித்திருந்தார். எஃகு தடுப்பு சுவர் கட்டுவதற்காக சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் தொகை கேட்கிறார் அதிபர் டிரம்ப். ஆனால் பிரதிநிதிகள் சபையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியின் நிதி ஒதுக்க மறுத்துவருகின்றனர்.

ஹோண்டுரா குடியேறிகள்

பேச்சுவார்த்தை எப்படிச் சென்றது?

மிகவும் சுருக்கமாகவே பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. அதாவது வெறும் 14 நிமிடங்கள்.

அதிபர் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியிடம் ” நீங்கள் எல்லைச்சுவருக்கு நிதியை தருவீர்களா இல்லையா” என நேரடியாகவே கேட்டார். பேச்சவார்த்தைக்கு பின்னர் அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட்டில்

தன்னுடைய கேள்விக்கு நான்சி ‘இல்லை’ என பதிலளித்ததாகவும் இதையடுத்து ‘பை பை’ எனச் சொல்லிவிட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிபரின் கேள்வி மற்றும் நான்சியின் பதிலை ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிபர் டிரம்ப்பிடம் ”நீங்கள் மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறீர்கள். ”நீங்கள் ஏன் அரசாங்க முடக்கத்தை நீக்கி, மக்களை தொந்தரவு செய்வதை நிறுத்தக்கூடாது?” எனக் கேட்டிருக்கிறார் சக் ஸ்கூம்மர்.

”நான் நாட்டுக்கு நல்லது செய்யவே முயற்சிக்கிறேன். இது அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல” என நியூயார்க் டைம்ஸிடம் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது மேஜையை வேகமாக தட்டிவிட்டு சென்றதாக ஸ்கூம்மர் தெரிவித்துள்ளார் ஆனால் துணை அதிபர் மைக் பென்ஸ் இதனை விவாதத்துக்குள்ளாக்கினார். அ

பிரதிநிதிகள் சபையின் குடியரசு கட்சித்தலைவர் கெவின் மெக்கார்தி, ஜனநாயக கட்சியினரின் நடத்தை இழிபடுத்துவதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் முதல்முறையாக தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். எல்லை விவகாரம் மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி சார்ந்தது என விவரித்தார். ஆனால் அதிபரின் கூற்று ஒரு போலியான அச்சுறுத்தல் என ஜனநாயக கட்சி தெரிவித்தது.

டிரம்ப் இப்போது என்ன செய்யவுள்ளார்?

அமெரிக்க - மெக்சிகோ எல்லை

வியாழக்கிழமையன்று அதிபர் டிரம்ப் எல்லைக்குச் செல்கிறார்.

டெக்ஸாஸின் மெக்ஆலன் எல்லை காவல் நிலையத்தை அதிபர் டிரம்ப் நேரில் சென்று பார்வையிடவுள்ளார். சட்டத்துக்கு புறம்பான வகையில் அமெரிக்காவில் நுழைபவர்கள் எல்லையின் எந்த பகுதியை அதிகளவு பயன்படுத்துகிறார்கள் என நேரடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்வார்.

குடியரசு கட்சியின் தலைவர்கள் அதிபர் டிரம்ப்பின் அணிவகுப்பதாக தெரிவித்துள்ளார். கட்சியில் பெரும்பாலனவர்கள் அதிபர் சமரசமற்ற நிலையை எடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் இவ்விவகாரம் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவிப்பதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் டிரம்ப் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டால் அது மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகும் மேலும் நீண்ட ஒரு சட்ட போராட்டமாக உருவெடுக்கும்.

ஜனநாயக கட்சியினர் இவ்விவகாரத்தில் தங்களை நிலைப்பாட்டில் சிறிதளவு கூற மாறவில்லை. அரசாங்க முடக்கத்துக்கு மக்கள் டிரம்ப்பைதான் காரணமாகச் சொல்வார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.

புதிதாக வந்த ஒரு கருத்துக்கணிப்பு 51% அமெரிக்கர்கள் அதிபர் டிரம்ப் மீது பழி சுமத்துகின்றனர். ஆனால் குடியரசு கட்சிக்கு வாக்களித்தவர்களில் 71% பேர் அதிபர் டிரம்ப் எல்லைச்சுவருக்கு பணம் வேண்டுமென உறுதியாக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எப்படி முடக்கம் நடக்கும்?

ஒரு விஷயத்துக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலோ அல்லது அதிபர் கையெழுத்திட மறுத்தாலோ பகுதியளவு அரசாங்க முடக்கம் நடைபெறுகிறது.

தற்போதைய பகுதியளவு முடக்கம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி துவங்கியது. இதனால் 25% அரசு பணிகள் முடங்கின மேலும் கிட்டதட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தற்காலிக விடுப்பை போல குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு வர வேண்டாமென சுமார் 3.5 லட்ச அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். மற்றவர்கள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.

பகுதியளவு முடக்கம் துவங்கிய பின்னர் முதல் சம்பள நாள் வரும் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. ஆனால் அந்ததினத்தை சம்பளமில்லாமல் ஊழியர்கள் கடக்க வேண்டும்.

பொதுவாக அரசாங்க முடக்கம் ஏற்பட்டால், நிலைமை மீண்டும் சரியானபிறகு முன்பு கொடுக்க வேண்டிய ஊதியம் திருப்பியளிக்கப்பட்டுவிடும். ஆனால் இது மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களாக வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது. மேலும் காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலுவை தொகை திருப்பியளிக்கப்படும்.

1980களில் இருந்து அரசாங்க முடக்கம் நடைபெற்ற நாள்கள்

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. நிலைமையை சமாளிக்க அவர்கள் வேறு சில நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலர் வேறு வேலையை எடுத்துச் செய்கிறார்கள், சிலர் கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டையை நம்பியிருக்கிறார்கள். சிலர் சேமிப்பு நிதியை செலவு செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் தேவைக்கு தேவையான தொகையை செலவழிக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பகுதியளவு முடக்கம் இந்த வார இறுதியில் அமெரிக்க வரலாற்றிலேயே நீண்டகாலம் நடந்த அரசாங்க முடக்கமாக பதிவு செய்யப்படும். -BBC_Tamil