போப் மனோலனுக்கு அன்வார் கண்டனம்

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை, ‘தோக் பாத்தின்’களை (பூர்வக்குடியினர் கிராமத் தலைவர்கள்) அச்சுறுத்தியது பற்றி, பிகேஆர் செனட்டர் போப் மனோலன் விளக்கப்படுத்த வேண்டுமெனக் கட்சியின் தலைவர் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

“ஜனநாயகத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை, போப் உடனடியாக தனது அறிக்கையை விளக்க வேண்டும்,” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தரவில்லை என்றால், அவர்கள் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் என்று தோக் பாத்தின்களைப் போப் எச்சரித்ததாக, மலேசியாகினி வெளியிட்ட செய்தி குறித்து, அன்வார் கருத்துரைத்தார்.

தோக் பாத்தின்களுக்கு மத்திய அரசாங்கம் பணம் கொடுக்கிறது, ஆக அவர்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கவில்லை என்றால், நாம் அவர்களை நீக்கிவிடுவோம் என்று இன்று காலை, போஸ் பெத்தாவ், ஜெலாயில் தோக் பாத்தின்களுடனான சந்திப்பில் அவர் பேசியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சில பாத்தின்கள், இந்த எச்சரிக்கை தங்கள் கௌரவத்தைக் குறைமதிப்பிடுவதாக விவரித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர், அஸார் ஹரூண், இந்த அச்சுறுத்தலை நேரில் கண்ட தரப்பினர், இசி-யில் புகார் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.

“வேட்புமனு தாக்கலுக்கு முன், எதுவேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் கருதுகின்றனர், அவர்கள் சட்டவிதிகளைப் படிக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, அம்னோவிடம் விஸ்வாசமாக இருக்கும் பாத்தின்களையே தான் குறிப்பிட்டதாக போ தெரிவித்தார்.

“அம்னோவிடம் விசுவாசமாக இருக்கும் பாத்தின்கள், தங்கள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றே நான் கூறினேன்,” என்றார் அவர்.

தோக் பாத்தின்களை மத்திய அரசாங்கம் நியமிப்பதால், அவர்கள் ஹராப்பானின் விருப்பத்திற்கும் கொள்கைகளுக்கும் இசைய வேண்டும் என்றும் போ கூறியதாக தெரிகிறது.