“சவேந்திர சில்வா வெள்ளை கொடியுடன் சரணடைந்தோர் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும்”

இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த போர்க்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

எனினும் இவை அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உள்ளது என்றும் இவற்றை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

சவேந்திர சில்வாவேவுக்கு ராணுவத்தில் உயர் பதவி

அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவித்து போர்க் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது.

இருப்பினும், தமிழர்கள் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கேட்கிறார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு போர்க்குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும்போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தபோது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன்

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத போர் இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

இலங்கை
இலங்கை

எனவே, சர்வதேசம் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என்பதை பேசும் சர்வதேச ராஜதந்திரிகள் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் உள்ள உள்ளார்ந்த பொருளை பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

என்னுடைய கணவரான எழிலன் உட்பட ஏராளமானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்குகூட போர்க்காலத்தில் 58ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த இதே சவேந்திர சில்வாவிற்கு எதிராகத்தான் தொடர்ந்துள்ளோம்.

இறுதி போரின்போது பசியோடு உணவிற்காக வரிசையில் காத்திருந்த அந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீது மல்ரிபெரல் செல் தாக்குதல் நடத்தி சிறுவர்களை கொன்ற குற்றவாளியும், இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் சவேந்திர சில்வாவே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகளின் தொடர்பிலும் இவர்தான் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன்

சவேந்திர சில்வா தொடர்பானபோர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்று வெளியிடப்பட்டவை இல்லை. இவை சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.

இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் இந்த அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது கவலை தருகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலில் இருந்து நழுவிச் செல்லும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரச் செயல் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் மட்டுமல்ல.

இலங்கை
இலங்கை

மற்றுமொரு போர்க்குற்றவாளியாக சரத் பொன்சேகாவிற்கு ஃபில்ட் மார்ஷல் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகும். இவை அனைத்தும் தமிழர்கள் ஒருபோதும் இராணுவத் தரப்பை போர்க்குற்றவாளியாக்க முடியாது என்பதை அரசாங்கம் நேரடியாக செல்லுகின்ற விடயமாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் அத்தபத்துவிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டது.

இதற்கு விளக்கமளித்த இராணுவப் பேச்சாளர், இவை அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எனவும், இவற்றுக்கு ராணுவத் தரப்பில் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் அவற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் கூறினார். இலங்கை ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவற்றை விசாரிக்க ராணுவ நீதிமன்றம் இருப்பதாகவும், எனினும், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil

TAGS: