ச்செவ் வான் நஜிப்பிடம் மன்னிப்பு கோரினார்

நேற்று கேமரன் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் பிரதமர் நஜிப்பை அறைவேன் என்று கூறிய ச்செவ் வான், ‘தவறுதலாக’ பேசிவிட்டதாகக் கூறி, இன்று மன்னிப்பு கேட்டார்.

இன்று, இன்ஸ்தாகிரேம்மில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உணர்ச்சி வசப்பட்டு தான் அவ்வாறு பேசிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

“நான் கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டேன். அதற்காக நஜிப்பிடம் நான்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

“நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டத் தெரியாதவனாக இருக்க நான் விரும்பவில்லை,” என்று ச்செவ் வான் தெரிவித்தார்.

ஃபெல்டா குடியிருப்பில் வளர்ந்த ச்செவ் வான், அந்த அரசாங்க நிறுவனத்தின் மீது ஏமாற்றம் தெரிவிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017-ம் ஆண்டு, ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டபோதும், அவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

அப்போது, பெர்சத்து தலைவரான டாக்டர் மகாதிர், உண்மையைப் பேசி, நீதியை நிலைநாட்டிய ச்செவ் வானைத் தைரியசாலி எனப் புகழ்ந்தார்.

மன்னிப்பு கேட்டபோதும், ஃபெல்டா திட்டத்தின் மீதான பிஎன் மற்றும் நஜிப்பின் போக்கு குறித்த தனது விமர்சனத்தை அவர் மீட்டுக்கொள்ளவில்லை.