அமெரிக்காவில் ‘தலைமுறை காணாத கடுங்குளிர்’: மாநிலங்களில் அவசரநிலை

துருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன.

ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுங்குளிர் நிலவி வருவதால், அந்த சூழலை எதிகொள்ளும் வகையில், அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து பனிக்கட்டியை அகற்றும் பணியாளர்கள்
விமானத்தில் இருந்து பனிக்கட்டியை அகற்றும் பணியாளர்கள்

அண்டார்டிக்காவின் பகுதிகளை விட அதிக குளிராக சிகாகோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

ஆனால், அடிக்கின்ற குளிர் காற்று மிகவும் கடுங்குளிராக இருக்கும் என்பதால், சில நிமிடங்களில் குளிர்நடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனி

சிகாகோவில் -30 டிகிரி செல்சியஸாகவும், மிச்சிகனில் -37 டிகிரி செல்சியஸாகவும் தட்பவெப்பநிலை குறைந்துள்ளது.

இந்த கடுங்குளிரை 250 மில்லியன் அமெரிக்கர்கள் சந்திக்கவுள்ள நிலையில், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் டிகிரி வானிலையை எதிர்கொள்ள உள்ளனர்.

அடுத்த வார இறுதியில், -28 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பநிலையை 20 மில்லியன் அமெரிக்க மக்கள் அனுபவிப்பர்.

கிரேட் லேக்ஸ் பிரதேசத்தில் இருந்து நியூ இங்கிலாந்தில் புதன்கிழமை முழுவதும் பனிப்பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸிலும், தொலைதூர மாநிலங்களான அலபாமா மற்றும் மிஸிசிப்பியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது,

“இதுவொரு வரலாற்று பதிவாக இருக்கும்” என்று இல்லினாய்ஸ் தேசிய வானிலை மையத்தின் வானியல் ஆய்வாளர் ரிக்கி காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். -BBC_Tamil