செமிஞ்யி இடைத் தேர்தலைத் தடுத்து நிறுத்த வாக்காளர் முயற்சி

செமிஞ்யி இடைத் தேர்தலைத் தடுத்து நிறுத்தக் கோரி திங்கள்கிழமை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் மனு செய்து கொள்வார்.

இப்போதுள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தல் நடத்தத் தகுதி இல்லை என்ற அடிப்படையில் தன் கட்சிக்காரர் தேர்தல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார் என வழக்குரைஞர் முகம்மட் கைருல் அஸாம் அப்துல் அசீஸ் கூறினார்.

“இசியில் தலைவர் இருக்கிறார் ஆனால் அதில் இருக்க வேண்டிய ஆறு உறுப்பினர்கள் இல்லை என்பதால் அரசமைப்புப்படி இசி என்ற ஒன்று சட்டப்படி இல்லை”, என்றாரவர்.

மார்ச் 2-இல் இடைத் தேர்தலை அறிவித்த இசி தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன் ஆணையர்கள் இல்லை என்பதற்காக இசி இல்லை என்றாகி விடாது என்று கூறியிருந்தார்.

ஆணையத்தில் உறுப்பினர்கள் இல்லை என்ற நிலையால் ஆணையத்தின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்று கூறும் அரசமைப்பின் 33வது பகுதியை அவர் சுட்டிக்காட்டினார்.