தமிழக மீனவர்கள் 7 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர்.

கடந்த 7- ந் தேதி பைபர் படகில் நாகையில் இருந்து புறப்பட்ட அவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை திருகோணமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்தி, வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: