ராம் கர்ப்பால் : அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிகிறார் என்றால், சட்ட ஆலோசகரை நீக்க வேண்டும்

அட்டர்ணி ஜெனரல் அலுவலகம், அரசாங்கத்தின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்காமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் எனும் கோட்பாடு புரியவில்லை என்றால், சட்ட ஆலோசகர் III முகமட் ஹனாஃபியா ஜகாரியாவை அப்பதவியிலிருந்து  நீக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்பி, ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, உயர் ஊழல் வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்து துணைப் பொது வழக்கறிஞர்களுக்கும் ஹனாஃபியா அனுப்பிய மின்னஞ்சல் குறித்து ராம்கர்ப்பால் இவ்வாறு கருத்துரைத்தார்.

“இப்பிரச்சனையில் ஹனாஃபியாவின் நிலைப்பாடு மிகவும் தீவிரமானது.

“அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் அரசாங்கத்தின் கட்டளைகளில் இருந்து விடுபட்டு, பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அவர் அறியவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது.

“இது மிகவும் தவறான ஒன்று மட்டுமல்ல, ஹனாஃபியா பதவிக்கு வெட்கட்கேடான ஒன்று. இது புரியவில்லை என்றால், அவர் அப்பதவியிலிருந்து விலக வேண்டும், இல்லையே அவரை நாம் நீக்க வேண்டும்,” என்று ராம்கர்ப்பால் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

இதற்கிடையே, மின்னஞ்சலைத் தற்காக்கும் வகையில், அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அரசாங்க இயந்திரத்தின் ஒரு பகுதி, அது சட்டப்பூர்வமாக இருக்கும் வரையில், அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

பொதுவாக, அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமே ஒழிய, அதற்கு நேர்மாறாக அல்ல என்று ராம் கர்ப்பால் சொன்னார்.

“நமக்கு சுயாதீனமாகப் பணியாற்றும் நபர்கள்தான் தேவை. அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிபவர்கள் நமக்கு தேவையில்லை,” என்றார் அவர்.