பிறந்தநாள் அன்று, சாமிவேலு மீது எம்ஏசிசி-யில் புகார் அளிக்கப்படும்

முன்னாள் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர், எம் லோகநாதன், எதிர்வரும் மார்ச் 8-ம் தேதியன்று, கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலுவுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

மூன்றாவது முறையாக புகார் செய்ய, லோகநாதன் தேர்ந்தெடுத்துள்ள மார்ச் 8, வெள்ளிக்கிழமை, அந்த முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சரின் பிறந்த தினமும் ஆகும்.

“இரண்டு முறை நான் எம்ஏசிசியில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த முறை மார்ச் 8-ம் தேதியை மூன்றாவது புகார் அளிக்க நான் தேர்ந்தெடுத்தேன்.

“அந்நாள் சாமிவேலுவின் 83-வது பிறந்த தினம் ஆகும். எனவே, இது அவருக்கு என் ‘பிறந்தநாள்’ பரிசாகும்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சாமிவேலு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக அந்தப் புகார் அளிக்கப்படும் என லோகநாதன் தெரிவித்தார்.

புகார்கள் பற்றி அவர் விவரிக்கவில்லை என்றாலும், அது சந்தை விலையைவிட குறைந்த விலையில் வாங்கப்பட்ட 101 ஏக்கர் நிலப்பரப்பு, மாநாட்டு மண்டபம் கட்டப்பட்டது மற்றும் கேபிஜே-வுக்குச் (கொப்பராசி பெகெர்ஜா ஜெயா பெர்ஹாட்) சொந்தமான இன்னுமொரு நிலம் சம்பந்தப்பட்டது என அவர் கூறினார்.

“நான் இங்கு குறிப்பிட்ட இந்த நிலங்களும் கட்டடமும், மஇகாவுக்குத் தொடர்பே இல்லாத ஒரு சீன வர்த்தகரின் பெயரில் தற்போது உள்ளன. இதுபற்றி நான் மேலும் விவரிக்க விரும்பவில்லை,” என்றார் அவர்.

ஒரு காலத்தில், சாமிவேலுவின் தீவிர ஆதரவாளராக இருந்த லோகநாதன், 2016 செப்டம்பர் 10-ம் நாள் சாமிவேலுவுக்கு எதிரான முதல் புகாரையும் 2017 பிப்ரவரி 28-ம் நாள் இரண்டாவது புகாரையும் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, சாமிவேலுவின் கருத்தை அறிய, மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டுவருகிறது.