மெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு!

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

வரப்போகும் தேர்தலில் கமலும், சீமானும் தனித்து போட்டியிடுவதாக சொல்லி விட்டனர். இதில், கமலுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் சீமானுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதுபோலவேதான் நாம் தமிழர் கட்சி தனித்து போடடியிட்டது. அப்போது அக்கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். அதனால் இந்த முறையும் அதே சின்னத்தை வேண்டும் என சீமான் கேட்டார்.

மக்கள் ஜனநாயக முன்னணி

ஆனால், போன வருட கடைசியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதுடன், அக்கட்சிக்கு மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

தர முடியாது

அதனால் அதே சின்னம் உங்களுக்கு தர முடியாது என்று ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனை ஏற்ற நாம் தமிழர் கட்சியும், அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

கரும்பு விவசாயி

அதன்படி, தற்போது நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

எதுவானால் என்ன?

சின்னம் எதுவானால் என்ன… இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை சந்திக்க உள்ளார் சீமான்.. நிச்சயம் அவருக்கு அனுகூலமான முடிவுகளையே இந்த தேர்தல் பெற்றுத்தரும்!

tamil.oneindia.com

TAGS: