’காணாமற்போன உறவுகளை தேடும் பெண்கள் மீது துன்புறுத்தல்’

இலங்கையிலிருந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக, ஐக்கிய அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, இலங்கைப் பொலிஸார், தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே, இந்த விடயம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ, நேற்று முன்தினம் (13) வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில், இலங்கையின் அரசமைப்பு மற்றும் சட்டங்களினூடாக, சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

பொதுவாக, சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை, இதுவரையில் உருவாக்கப்படவில்லை

எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கும் சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-tamilmirror.lk

TAGS: