பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா? சேவியர் ஜெயக்குமார் விளக்குகிறார்!

பஹாங் மாநில, குவாந்தான் பகுதியில் பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை மார்ச் மாதம்  31ந்தேதியுடன்  முடிவுக்கு வருவதாகப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள  அறிவிக்கையால்  மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று  நீர் நிலம் இயற்கைவள  அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். 

பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை மார்ச் மாதம்  31ந்தேதியுடன்  முடிவுக்கு வருகிறது என்றால் ஏப்ரல் 1ந்தேதி முதல் பொக்ஸ்சைட் கனிம வளத் தொழில் ஈடுபட்டு வந்தவர்கள் மீண்டும் பழைய முறைப்படி தாங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்தலாம் என்று அர்த்தமாகாது, 

கடந்த 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொக்ஸ்சைட் தொழில் மீது  அமலிருக்கும் தடை, நாட்டின் கனிமவள மேம்பாட்டு விதி 525 ன் படி மீட்டு கொள்ளப் பட்டாலும், பஹாங் மாநில, குவாந்தான் பகுதியில் பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்  பரிந்துரைக்கப் பட்டுள்ள புதிய நடைமுறைவிதிகள் மற்றும் சுற்றுப்புறம்,ற மாசு கட்டுப்பாடு  விதிகளுக்கு  உடன்பட இசைவு தெரிவிக்கும் நிறுவனங்கள் மட்டுமே  அத்தொழிலைத் தொடர்ந்து மேற் கொள்ள அனுமதிக்க முடியும். 

அதற்கான சில கடுமையான கட்டு பாடுகளையும் விதி முறைகளையும் நீர் நிலம் இயற்கைவள அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தக் கட்டு பாட்டு விதிகளில் பொக்ஸ்சைட் கனிமவளம் தொழில் துறைகளில் ஈடுபடுபவர்களின் நலன் மட்டும் காக்கப் படாமல் சுற்று வட்டாரப் பொது மக்களின் நலனும் இயற்கை சுற்றுச்சூழலைப் பேணக்  கூடிய சகல அம்சங்களும் கண்டிப்பாகக் கடை பிடிக்கப் படுவதை  உறுதி செய்வது அதன் நோக்கமாகும். 

பரிந்துரைக்கப் பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை மற்றும் சுற்றுப்புற மாசு கட்டு பாடு  விதிகள் குறித்த விளக்க வெளியீடுகள் குறித்த மார்ச் 31 ந்தேதி அறிக்கை வெளியிடப்படும். அதன் பின், விளக்க வெளியீடுகள், நடைமுறை விதிகள் குறித்த அனைத்துச் சாராரும் தெளிவாக  அறிந்து கொள்ள வசதியாகக் கீழ் காணும் www.Kats.gov.my என்ற அமைச்சின் அகப் பக்கத்திலும், மலேசியத் தினசரிகளிலும் காணலாம். 

அதன் படி, அது குறித்த அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏப்ரல் 14ந்தேதி வரை, மக்களின் பார்வைக்கும், ஆட்சேபங்களுக்கும், கலந்தாய்வுகளுக்கும், பரிந்துரைகளுக்கும் அது திறந்து வைத்திருக்கப்படும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.