மெக்சிகோ மதில் சுவர் – டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை நசுக்க 26-ம் தேதி வாக்கெடுப்பு!

மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் 26-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

இதனால், அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின் தெற்கு பகுதியில் எல்லை சுவர் கட்டுவதற்கு 800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யும் அவசரநிலை பிரகடணத்தை கடந்த மாதம் டிரம்ப் பிறப்பித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் சார்பில் அமெரிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின்மீது நடந்த வாக்கெடுப்பில் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து 182 உறுப்பினர்களும், எதிராக 245 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட 290 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்ற நிலையில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக இந்த வாக்கெடுப்பு அமைந்திருந்தது. டிரம்ப்பின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது ’வீட்டோ’ (சிறப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் நேற்று கையொப்பமிட்டார்.

இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா? ரத்து செய்வதா? என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வரும் 26-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

-athirvu.in