தாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் – இந்திய அரசு கோரிக்கை!

ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

இப்போதைக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்.

ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது, கடத்தல், ஹவாலா பணபரிமாற்றம் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறது.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

-athirvu.in

TAGS: