ஈரானில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆனது!

ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டில் வெப்பமயமாதல். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கடந்த மாதம் தொடங்கிய கனமழையால் அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.

அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். சுமார் 86 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

-athirvu.in