ஞானராஜாமீது ரிம11.4 மில்லியன் நிதி மோசடி செய்ததாக 68 குற்றச்சாட்டுகள்

ஜி.ஞானராஜா பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டக் குத்தகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை ஏமாற்றிப் பணம் பறித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று அவர்மீது பண மோசடி செய்ததாக மேலும் 68 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஸினா ஆயுப் முன்னிலையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அத் தொழிலதிபர் விசாரணை கோரினார்.

பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பூமி முகிபா கேப்பிடல் ஹோல்டிங்ஸிலிருந்து காசோலை மூலமாக உள்துறை அமைச்சுக்கும் வேறு சில தரப்புகளுக்கும் பணத்தை மாற்றி விட்டதில் அவர் பணமோசடி செய்ததாகக் கூறின.

குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு ஞானராஜாவே இயக்குனரும் உரிமையாளரும் ஆவார்.