அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை!

இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in