வேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங் அஸ்லி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முனைய வேண்டும்

நீண்ட-காலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய ஓராங் அஸ்லி மாநாடு அடுத்த திங்கள்கிழமை நடைபெறுகிறது.

அது வெறும் பேச்சரங்கமாக இருந்துவிடாமல், அச்சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு புதிய காலக்கட்டத்தின் தொடக்கமாக அமைவதை உறுதிப்படுத்துவதில் முனைப்பாக உள்ளார் பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

“ஓராங் அஸ்லி பிரச்னைகளுக்கு முழுமனத்துடன் தீர்வுகாண முனைய வேண்டும்” என்றாரவார்.

ஒராங் அஸ்லிகள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் துன்புறுகிறார்கள். அவர்களின் பாரம்பரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றவர் சொன்னார்.

எனவே, அம்மாநாடு அவர்களின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பான விவகாரங்கள்மீது முக்கியமாக கவனம் செலுத்தும்.

“அத்துடன் அவர்களின் வாழ்க்கைமுறையையும் பண்பாட்டையும் பாதுகாத்தல், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் மாநாடு விவாதிக்கும்”, என வேதமூர்த்தி கூறினார்.