ஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்? எம்பி விளக்கம்

ஜோகூரின் புதிய மந்திரி புசார் டாக்டர் ஷருடின் ஜமால், யாருடன் இணைந்து பணியாற்றுவது வசதியாக இருக்குமோ அப்படிப்பட்டவர்களை ஆட்சிக்குழுவில் வைத்திருப்பதாகக் கூறினார்.

பெர்சத்துவின் மஸ்லான் பூஜாங்கும் டிஏபி-இன் டான் ஹொங் பின்னும் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பற்றி விளக்கியபோது அவர் இவ்வாறு கூறினார்.

“நான் ஏற்கனவே கூறியதுபோல், எந்தெந்த ஆட்சிகுழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுவது வசதியாக இருக்கும் என்பதை நான் கண்டறிய வேண்டியிருந்தது. நாங்கள் எல்லாருமே மக்களுக்காகப் பணியாற்றுபவர்கள்தான்.

“நானும் ஒரு அரசுப் பணியாளன்தான். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நான் செய்து முடித்தாக வேண்டும்”, என்றவர் இன்று நூசாஜெயாவில் கூறினார்.

மஸ்லானுக்கும் டானுக்கும் அரண்மனையில் நல்ல பெரரில்லை என்பதால் அவர்கள் ஆட்சிக்குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்று மலேசியாகினி முன்பே ஆருடம் கூறியிருந்தது.

ஆனால், இன்று காலை பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆட்சிக்குழு நியமனத்தில் அரண்மனை சம்பந்தப்படவில்லை என்று கூறினார்.