மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு!

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.

இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.

இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும், இந்த நிதியானது, முந்தைய ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்காமல் நிறுத்திவைத்த நிதியுதவி, நிறைவேற்றப்படாத திட்டங்களின் நிதி உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

-athirvu.in