வீடும் கட்டிக் கொடுத்து, கிரகப் பிரவேசமும் செய்து தந்த ராகவா லாரன்ஸ்.. என்னா நல்ல மனசு!

சென்னை: தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு பிறகும், கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சினிமா தவிர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய லாரன்ஸ், அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி, கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.

நல்ல முயற்சி:

இதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள், தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன்.

தாய் அமைப்பு:

தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

வெற்றிக்குக் காரணம்:

காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்பப்படுகிறேன்.

நம்பிக்கை:

குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

tamil.filmibeat.com