இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்க உதவி!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார்.

இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவையும்  அவர் மீள வலியுறுத்தினார்.

குண்டு வெடிப்புகளை அடுத்து அமெரிக்கா வழங்கியிருந்த ஒத்துழைப்புகளுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய தாக்குதல்களை தடுத்துக் கொள்வதற்கான பங்காண்மையை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதிலான இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.

இலங்கையில் சுபீட்சம் மற்றும் பொருளாதார இறைமைக்கு பங்களிப்பு செய்யும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மிலேனியம் சேலேன்ஞ் கோர்பரேஷன் (Millennium Challenge Corporation – MCC) ஒப்பந்தத்திற்கான அங்கீகாரத்தை முக்கியமானதொரு முன்னேற்றமாக இருவரும் வரவேற்றனர்.

பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும் இராஜாங்க செயலாளர் பொம்பேயோ வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: