வகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களது ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நாள் வாழ்த்து அன்பளிப்பு வழங்கினர்

கடந்த மே 16 ஆசிரியர் நாளை முன்னிட்டு மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் 1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் வரையிலும் 1995லிருந்து 2000ம் ஆண்டு வரையில் டத்தோ அசி அப்துல் வகாப் எனும் இடைநிலை பள்ளியில் பயன்ற நண்பர்கள் குழு ஒன்று இரு பள்ளி ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பு வழங்கினர்.

இதுவரை தனிப்பட்ட முறையில் கொண்டாடிய இவர்கள் முதன் முறையாக அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
முதல் கட்டமாக மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்ப தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்கிய வேளையில் அனைத்து நண்பர்களின் சார்பில் திரு வீ.பாலமுருகன் மற்றும் திரு ச.நாகேந்திரன் அவர்கள் தலைமையேற்றனர்
அங்கு கூடியிருந்த மாணவர்கள் முன்னிலையில் திரு பாலமுருகன் வீராசாமி அவர்கள் ஆசிரியர்களின் மகத்துவத்தை பற்றி பேசுகையில், தாய்மொழி தமிழ் எழுத்தில் ஆசான் எனும் சொல்லில் *ஆ* = உயிர் எழுத்தும் *சா* = உயிர்மெய் எழுத்தும் *ன்* = மெய் எழுத்தாகவும் கூடிய உயிரும், மெய்யும் உயிர்மெய்யும் கலந்ததுவே = *ஆசான்* என சிறப்பு மிக்க அரிய சொல்லுக்கு உதாரணமாக தன் தொழிலை உயிராக கொண்டு உயரிய மெய்களை தன் மாணவர்களுக்கு கற்று தருபவரே ஆசான் என்றார். அத்துடன் தமக்கு கல்வியை கற்பிக்கும் தன்னலமற்ற ஆசிரியர்களை நாம் கடவுள்களாக போற்ற வேண்டும் என்றதோடு அனைத்து நண்பர்கள் சார்பிலும் ஆசிரியர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பளிப்பை வழங்கினார். 

திரு நாகேந்திரன் சந்திரசேகர் அவர்கள் உரையாற்றுகையில் முதன் முறையாக நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஆசிரியர் நாளை, வருங்காலங்களில் இன்னும் சிறப்புடன் கொண்டாட முனைவோம் என்றார். மேலும் எங்களை போன்று மற்ற முன்னாள் மாணவர்களும்  தங்களது பள்ளிக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு அன்பளிப்பை எடுத்து வழங்கினார். 
திரு பாலமுருகன் மற்றும் திரு நாகேந்திரன் இருவரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும், முன்னாள் மாணவர் சங்கத்திலும் தங்களது சேவையை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அன்பளிப்பு பெற்று கொண்ட ஆசிரியர்கள் வகாப் நண்பேன்டா 2000 குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.