வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு.

இடைநிலை நீதி பணிக்குழு எனும் அரசுசாரா அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.

மாட்டை திருடியவர்கள் முதல் தென் கொரிய தொலைக்காட்சியை பார்த்ததவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக கொல்லப்பட்டவர்கள் குறித்து தகவல்களை இந்த அமைப்பு சேகரித்துள்ளது.

கொலை மேடைகள்

ஆறுகள், வயல்வெளிகள், சந்தை பகுதிகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு பொது இடங்கள் அருகில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக இந்த அமைப்பு கூறுகிறது.

பொது இடங்களில் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனையை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகள் உட்பட இந்த மரண தண்டனையை பார்க்க நிர்பந்திக்கப்பட்டதாக இந்த அறிக்கை விவரிக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அரிதாகதான் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஏழு வயது சிறுவன்

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஏழு வயது சிறுவன் கூட பார்த்து இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

சில மரண தண்டனைகள் தொழிலாளர் முகாம்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியல் குற்றங்களில் ஈடுப்பட்டதாக கூறப்படுவோர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு, சுரங்கப்பணிகளில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

தொழிலாளர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தப்பிய ஒருவர், சீனாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் கொல்லப்படுவதை காண எப்படி நிர்பந்திக்கப்பட்டோம் என்று கூறியதை பதிவு செய்துள்ளது இந்த அறிக்கை.

“இது உங்களுக்கும் நேரலாம்” என மக்கள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எப்படி கொல்லப்படுவார்கள்?

பொதுவாக துப்பாக்கியால் சுட்டுதான் கொல்வார்கள் என ஒருவர் கூறி உள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை, மூன்று பேர், மூன்று முறை துப்பாக்கியால் சுடுவார்கள்.

இந்த பணியில் ஈடுப்படும் நபர்கள் மது அருந்தி இருப்பார்கள்.

இந்த அறிக்கையை தயாரித்த குழுவில் இருந்த எதான் சின், “இவ்வாறாக மரண தண்டனை விதிப்பது இப்போது குறைந்துள்ளது. தங்களை சாதாரண அரசாக கருத வேண்டுமென வட கொரியா விரும்புகிறது. அது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதே நேரம் வடகொரியா மேலும் ரகசியமாக மரண தண்டனையை நிறைவேற்றுகிறதா என்று தெரியவில்லை” என்கிறார்.

உண்மைத்தன்மை

வட கொரியாவில் உயர் பதவிகளில் இருந்த பலருக்கு கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கிம் ஜோங் உன்னின் உறவினர் மீதும் ராஜதுரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் இவ்வாறு மரண தண்டனைகள் விதிக்கப்படுகிறதா? அதன் உண்மைதன்மை என்ன என்பது கேள்விகுறிதான். பல சமயங்களில் அது பொய்யாகவும் இருந்திருக்கிறது.

2013ம் ஆண்டு வட கொரிய பாடகி ஹியோன் சாங்குக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக க்தென் கொரியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால், 2018ம் ஆண்டு தென் கொரியா சென்ற வட கொரியா குழுவில் அவரும் இருந்தார். -BBC_Tamil