சிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்

சென்னை: நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா… இப்படி பன்முகம் கொண்டவர் கிரேஸி மோகன் இரு நாட்களுக்கு முன் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்கள் பலரும் அவர்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டனர். பலர், கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனங்களை பதிவு செய்து அவரது நகைச்சுவை உணர்வை பாராட்டினர்.

திரைப்பட ரசிகர்களுக்கு இருந்த இரங்கல் குணம் சினிமாவிலேயே இருக்கும் சில முன்னணி நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இல்லை என்பது வருத்தமான விஷயம். தங்கள் துறை சார்ந்த ஒரு பிரபலம் இறந்தால் கூட அவர்களது மறைவுக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஒரு வரி கூட இரங்கல் கூட தெரிவிக்காதவர்களைப் பற்றி நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, ஆர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் எந்த இரங்கலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார், பிரசன்னா போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கிரேஸி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற அருணாச்சலம் படத்தில் நடித்த ரஜினி கூட நேரில் வரவில்லை. தர்பார் படப்பிடிப்பிற்காக அவர் மும்பையில் இருந்தாலும் டுவிட்டரில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

கிரேஸி மோகன் வசனம் எழுதி வெற்றி பெற்ற படங்களில் நடித்த சில நடிகர்கள், நடிகைகள் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. மற்ற மொழித் திரையுலகத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. தமிழ்த் திரையுலகத்தில் சில ஆண்டுகளாக மறைந்த பிரபலங்களுக்கு பலர் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது தொடர்கிறது.

-dinamalar.com