முசாபர்பூர்: குழந்தைகளைக் கொல்வது எது? – மூளை அழற்சியா அல்லது நிர்வாகத்தின் அலட்சியமா?

இரவு 8 மணி. முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குப்பையின் நாற்றம், வியர்வை, பினாயில் மற்றும் சடலங்களின் வாடைகள் நிரம்பியிருக்கிறது. மருத்துவமனையின் முதலாவது மாடியில் ஐ.சி.யூ. வார்டுக்கு வெளியே செருப்புகள் கழற்றிவிடப் பட்டிருந்த இடத்தின் அருகே நான் நின்று, கண்ணாடிக் கதவு வழியே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பகல் நேரத்தில் 45 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்தால் தகித்துப் போன அந்த நகரம், இரவிலும் கூட தகிப்புடன் தான் உள்ளது. ஏறத்தாழ பத்து நிமிட இடைவெளிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குழப்பங்கள் நிறைந்துள்ளது. திடீரென வார்டின் உள்ளே இருந்து அலறல் சப்தத்தைக் கேட்டேன்.

நான் உள்ளே பார்த்தபோது, ஒரு படுக்கையின் மூலையில் அமர்ந்திருந்த ஒரு பெண், விம்மி அழுது கொண்டிருந்தார். அவருடைய பெயர் சுதா, வயது 27.

அடுத்த விநாடி அவர் தரையில் விழுந்து அழுது புரண்டார். அவருடைய மூன்று வயது மகன் ரோஹித் படுக்கையின் மீது உயிரற்றுக் கிடந்தான். தீவிர மூளை அழற்சி சிண்ட்ரோம் (AES) நோயின் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் தன் மகனை அவர் இழந்துவிட்டார்.

உயிரற்ற மகனின் பிஞ்சுக் கால்களைப் பிடித்துக் கொண்டு அலறினார் அவர். மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டி, நகரம் முழுக்கவே அந்த அலறல் எதிரொலிப்பதைப் போல நான் உணர்ந்தேன்.

டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி வார்டுக்கு வெளியே அவரை அழைத்துச் சென்றபோது, அவருடைய அலறல் படிப்படியாக முடிவில்லாத விம்மலாக மாறியது.

தன்னுடைய பிள்ளையின் மரணம் ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு வெறுமையை ஏற்படுத்தும் என்பதை, கடந்த இரண்டு வாரங்களில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரியின் ஐ.சி.யூ. வார்டில் நான் பார்த்து வருகிறேன்.

வார்டின் ஒரு மூலையில் நின்று நான் அழுது கொண்டிருந்தபோது, அங்கே இறந்து கொண்டிருந்த பிள்ளைகளின் தாய்மார்களின் ஒப்பாரி சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

AES நோய்க்கு முசாபர்பூரில் இதுவரை 121 குழந்தைகள் பலியாகியுள்ளனர். அப்பாவிக் குழந்தைகள் உயிரிழப்பை நிறுத்துவதற்கான அறிகுறி எதுவும் இன்னும் தென்படவில்லை.

அனில் சஹானி
அனில் சஹானி

வார்டுக்கு வெளியே, ஆறுதல்படுத்த முடியாத நிலையில் உள்ள சுதாவின் கணவரான, 35 வயதான அனில் சஹானி, தன் மனைவியை ஆறுதல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வார்டுக்கு உள்ளே, சிறுவனின் பிஞ்சுக் கால்களைப் பிடித்துக் கொண்டு அவனின் பாட்டி இன்னும் அழுது கொண்டிருக்கிறார்.

தங்களுடைய மகன் நேற்றிரவு வரையில் நன்றாக இருந்ததாக, வியர்வையில் நனைந்திருக்கும் அனில் சஹானி தெரிவித்தார்.

“ஒரு மணி நேரத்துக்கு முன்பு அவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அவனுடைய மூளை செயலிழந்துவிட்டதாக முதலில் டாக்டர்கள் கூறினார்கள். இப்போது அவனே போய்விட்டான்” என்று சஹானி கூறினார்.

அவர் சொல்லி முடிக்கும்போது மருத்துவமனையில் மின்சாரம் போய்விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுது கொண்டிருந்தபோது, கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறதா அல்லது கன்னத்தில் வியர்வை வடிகிறதா என்பதை செல்போனின் மங்கலான வெளிச்சத்தில் வேறுபடுத்தி அறிய முடியவில்லை.

வார்டுக்கு வெளியே நான் நடந்து சென்றபோது, சிறுநீர், வியர்வை, பினாயில், குப்பைகளின் நாற்றங்கள் மூக்கைத் துளைத்தன.

நடைபாதை ஓரத்தில் இரு புறங்களிலும் நோயாளிகள் படுத்துக் கிடந்தனர். குடும்பத்தினர் கைகளில் விசிறிகளைப் பிடித்துக் கொண்டும், தண்ணீர் கொடுத்தும் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

குடிநீர், சுத்தமான கழிப்பறைகள், படுக்கை மற்றும் மின்விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், இந்த இரவு நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பதைவிட பாழடைந்த இடம் போலத்தான் முசாபர்பூர் மருத்துவக் கல்லூரி தோற்றமளித்தது.

பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனும் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் வெற்று வாக்குறுதிகளைத் தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

மூளை அழற்சி போன்ற மோசமான நோய்த் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகள் நிறைந்திருக்கும் மருத்துவமனையில், செயல்படும் நிலையில் உள்ள சுத்தமான குடிநீர் குழாய் ஒன்றுகூட இல்லை.

இதுபற்றி டாக்டர் ஹர்ஷ்வர்த்தனிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது, “இந்த சிறிய விஷயங்கள் எல்லாம் மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பு” என்று பதில் அளித்தார்.

பொய் வாக்குறுதிகள்

அரசு நிர்வாகத்தின் குளறுபடிகள் பற்றிக் கேட்டதற்கு, முதல்வர் நிதிஷ்குமார், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோர் வந்து சென்றிருப்பதைப் பற்றி மட்டும் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் சாஹி கூறினாரே தவிர, நேரடியான பதில் எதையும் அளிக்கவில்லை.

“முசாபர்பூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 1500 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை படிப்படியாக கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (PIU) கட்டப்படும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, இந்தப் புதிய மருத்துவமனைகளைக் கட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று பிகார் அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் உறுதி அளித்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

குழந்தைகளைக் கொல்வது எது? - மூளை அழற்சியா? அல்லது நிர்வாகத்தின் அலட்சியமா?

ஆனால் இதுபோன்ற அரசு அறிவிப்புகள் அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பிகார் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு எதுவுமே ரோஹித்தின் பெற்றோர் மற்றும் பாட்டியின் துயரத்தைக் குறைக்கக் கூடியதாக இல்லை.

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் திடீரென……..

ரோஹித்தின் மரணத்துக்கு அடுத்த நாள், அவனுடைய குடும்பத்தினர் வசிக்கும் ராஜ்புனாஸ் கிராமத்துக்கு நாங்கள் சென்றிருந்தோம். 1500 வீடுகள் உள்ள அந்தக் கிராமத்தில் மல்லா சமூகத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் அனில் சஹானி வசித்து வருகிறார். அவருடைய நான்கு பிள்ளைகளில், கடைசிக் குழந்தை ரோஹித்.

ரோஹித்துக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முந்தைய நாள் இரவு பொதுவான இரவு உணவு நிகழ்ச்சி இருந்தது. அவனை அலங்காரம் செய்து, உடைகள் அணிவித்து இரவு உணவுக்கு அனுப்பி வைத்தோம். இரவில் வேதனையுடன் அவன் எழுந்து கொண்டான். பல முறை தண்ணீர் கேட்டான். துணிகளைக் கழற்றிவிடுமாறு கூறினான். அவனுக்கு சூடாக இருக்கலாம் என்று தாயார் கருதியிருக்கிறார். எனவே அவனுடைய உடைகளை நாங்கள் கழற்றிவிட்டோம். அமைதியாகத் தூங்கினான். காலையில் எழுந்தபோது, பசிப்பதாகக் கூறினான். அவனுக்கு தாயார் சாப்பாடு போடுவதற்கு முன்பு, தட்டில் இருந்து கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினான். இரண்டு ஸ்பூன் கூட சாப்பிட்டிருக்க மாட்டான். வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறினான்'' என்று அனில் தெரிவித்தார்.
<ul class="story-body__unordered-list">
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/india-48659194">பீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள் உயிரிழப்பு - லிச்சி பழம் காரணமா?</a></li>
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/science-44974114">பாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா?</a></li>
</ul>
பிள்ளைகளின் துணிகளுக்கு இடையே ஒரு துணியை தேடிக் கொண்டிருந்த ரோஹித்தின் தாயார் சுதா,
முதலில் பக்கத்தில் இருந்த டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றோம். ஆனால் டாக்டர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டிருப்பதால் அவனை பரிசோதிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். வேறு இரண்டு டாக்டர்களிடம் கொண்டு சென்றோம். அவர்களும் அதே காரணத்தைக் கூறி, பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு மெயின் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றோம். அங்கே அவனுக்கு ஊசி போட்டு, குளுகோஸ் மருந்து போட்டுவிட்டார்கள். ஊசி போட்டதும் பையனின் காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியது” என்று கூறினார்.

அதிக துயரத்தில் இருந்த ரோஹித்தின் பாட்டியை ஆறுதல்படுத்துவதற்காக இடைவெளிவிட்ட அனில் தொடர்ந்து பேசும்போது, “திடீரென அவனுக்கு உடல் நடுங்கியது. அவனை படுக்கையில் பிடித்து வைக்க நாங்கள் முயற்சி செய்தபோதும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கால்களை உதறிக் கொண்டிருந்தான். டாக்டர்கள் அவனை மூன்று முறை வேறு வார்டுகளுக்கு மாற்றினர். குளுகோஸ் இணைப்பை மாற்றினர். ஆனால் அவனுடைய நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போனது. ஆறு மணி நேரம் கழித்து, அவனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற ஒரு மணி நேரத்திற்குள் அவன் இறந்துவிட்டான்” என்று தெரிவித்தார்.

குழந்தைகள் மரணம் பற்றிய மருத்துவ ஆய்வு

வறுமை மற்றும் சத்தான உணவு இல்லாதது ஆகியவை தான் குழந்தைகளின் மரணத்துக்கு உண்மையான காரணங்களாக இருக்கும் என்று முசாபர்பூர் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் அருண் ஷா கூறினார்.

பிபிசிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்த அவர்,2014 முதல் 2015 வரையில் டாக்டர் முகுல் தாஸ், டாக்டர் அமோத், டாக்டர் ஜேக்கப் ஆகியோடன் இணைந்து இந்த நோய் குறித்து நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். எந்தவொரு பாக்டீரியா, வைரஸ் மூலமாகவோ அல்லது ஏதும் தொற்று காரணமாகவோ குழந்தைகளுக்கு இந்த நோய் வரவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்'' என்று தெரிவித்தார்.
<figure class="media-landscape has-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1485D/production/_107516048_aa17ae80-f350-454c-bffd-bae1c0a8d243.jpg" alt="அருண் ஷா" width="624" height="351" data-highest-encountered-width="624" /></span><figcaption class="media-caption"><span class="media-caption__text" style="color: #800000;">அருண் ஷா</span></figcaption></figure>
உண்மையில் இந்த நோயானது இயல்பில் செரிமாணம் தொடர்பானது. அதனால்தான் இதை நாங்கள் தீவிர ரத்த சர்க்கரைக் குறைபாட்டு மூளை அழற்சி (AHE) என்று கூறுகிறோம். வலிப்பு, உடலில் அதிர்ச்சிகள், அதிகமான காய்ச்சல் சுயநினைவு இழத்தல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றார் டாக்டர் அருண் ஷா. நீண்ட காலமாக சத்தான உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு உடலில் கிளைகோஜென் சேமிப்பு குறைவாக இருக்கும். அதனால் தான், லிச்சி வகை பழங்களில் உள்ள மீத்தைல் புரோபசிட் கிளைசின் எனப்படும் நியூரோடாக்சின் குழந்தையின் உடலில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதை நாங்கள் கிரெப் சைக்கிள் என குறிப்பிடுவோம். குழந்தையின் மூளைக்குப் போதிய அளவுக்கு குளுகோஸ் செல்வதை இது தடுத்துவிடும். அதனால் மூளை செயல் இழக்கும் அபாயம் அதிகரிக்கிறது'' என்று அவர் விளக்கினார்.
<ul class="story-body__unordered-list">
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/science-48710011">தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்</a></li>
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/science-48688583">தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?</a></li>
</ul>
ஆனால் லிச்சி தான் குழந்தைகள் மரணத்துக்குக் காரணம் என்று டாக்டர் அருண் ஷா கருதவில்லை. மாறாக, சத்தான உணவு கிடைக்காமல் போனது தான் இந்தப் பெரும் துயரத்துக்குக் காரணம் என்று அவர் நம்புகிறார்.
இந்த மரணங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு கொள்கையை நாங்கள் உருவாக்கி பிகார் அரசுக்கு அளித்திருக்கிறோம். தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் அதில் உள்ளன” என்கிறார் அவர்.

ஆஷா திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, கோடைக்காலத்தில் பிள்ளைகளுக்கு லிச்சி கொடுக்க வேண்டாம் என மக்களுக்குச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு சத்தான உணவு தர வேண்டும். இரவில் பசியுடன் குழந்தைகள் தூங்கக் கூடாது என்பவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அந்த வரைவுக் கொள்கையில் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/16F6D/production/_107516049_33ec11d2-0821-4e93-84de-34010d056eb0.jpg" alt="குழந்தைகளைக் கொல்வது எது? - மூளை அழற்சியா? அல்லது நிர்வாகத்தின் அலட்சியமா?" width="624" height="351" data-highest-encountered-width="624" /></span></figure>
ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக டாக்டர் ஷா கூறினார்.
குழந்தைகளின் உடலில் உள்ள குளுகோஸ் அளவைக் கண்டறிவதற்கு, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்திலும் குளுகோமீட்டர் இருக்க வேண்டும் என்று எங்கள் அறிக்கையில் நாங்கள் கூறியிருக்கிறோம். குழந்தையின் உடலில் குளுகோஸ் அளவு குறைவாக இருப்பதாகத் தெரிய வந்தால், உடனே குளுகோஸ் ஏற்றத் தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த முதல்நிலை சிகிச்சை, குழந்தைகளின் குணமாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால் இந்த அறிக்கையை அமல்படுத்துவதில் பிகார் அரசு முழுமையாகத் தவறிவிட்டது” என்று கூறினார் டாக்டர் ஷா.

ரோஹித்தின் குடும்பம் வசிக்கும் ராஜ்புனஸ் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் கடந்த 15 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. குளுகோமீட்டரை விடுங்கள், இப்போது வரையில் மருத்துவமனையே ஒருபோதும் திறக்கப்படுவதில்லை என்று கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

மற்றொரு புறம், ரோஹித்தின் ராஜ்புனஸ் கிராமத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கிவாயிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயதான அர்ச்சனாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது. எதுவும் சாப்பிடாமல் இரவில் அந்தக் குழந்தை தூங்கியிருக்கிறது. காலையில் வலிப்பு ஏற்பட்டதும் 15 நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது.

அர்ச்சனா
அர்ச்சனா

அப்பாவியான அர்ச்சனாவின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய தாயாரால் அழுகையை அடக்க முடியவில்லை.

அவருக்கு அருகே அமர்ந்திருந்த உறவினர் சரஸ்வதி, “காலையில் அதிகம் வியர்வையுடன் குழந்தை எழுந்தாள். ஆனால் உடனே மறுபடியும் தூங்கிவிட்டாள். குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எழுப்புவதற்கு தாயார் சென்றபோது, வாயில் பற்கள் இறுக்கமாக இருந்ததைப் பார்த்தார். பற்கள் ஒட்டிக் கொண்டுவிட்டதைப் போல அவர் உணர்ந்திருக்கிறார்” என்று கூறினார்.

“குழந்தையின் வாயைத் திறக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தாடைகள் இறுக மூடிக் கொண்டன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குழந்தையின் உடலில் நடுக்கம் இருந்தது. 15 நிமிடங்களில் எங்கள் மடியிலேயே குழந்தை இறந்துவிட்டது” என்றார் அவர்.

முசாபர்பூரின் வான்பரப்பு நிரந்தர சூளையைப் போல மரணங்களின் வெப்பத்தால் நிறைந்துள்ளது. குழந்தைகளின் மரணங்கள் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. -BBC_Tamil

TAGS: