ராகுல் காந்தி பதவி விலகல்: ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்’

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.

ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.

2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்திருந்தது.

இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் அவர் தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.

இரண்டாவது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றார்.

‘நானே பொறுப்பு’

இந்த நாட்டின் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நான்கு பக்க அறிக்கை ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கட்சியின் அடுத்த தலைவரை தானே முன்மொழிய வேண்டும் என்று கட்சியினர் தம்மிடம் கூறியதாகவும் அவ்வாறு தாம் தேர்வு செய்வது முறை ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

புதிய தலைவரை தேர்வு செய்ய அவர்களுக்கு தாம் அதிகாரம் அளித்துள்ளதாகவும், சுமூகமான மாற்றத்துக்கு தமது முழு ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாவும் ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டமும் பெருமையும் நிறைந்த வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியத் தன்மையுடன் இயைந்துள்ளது. துணிவு, அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வழிநடத்துபவரை தலைமையேற்க கட்சி தேர்வு செய்யும் என்று தாம் நம்புவதாக ராகுல் காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனது போராட்டம் அதிகாரத்துக்கு மட்டுமானதல்ல. எனக்கு பாஜக மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை; ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா பற்றிய அவர்களின் கருத்தை உள்ளார்ந்து எதிர்க்கிறது.

இந்தியா பற்றிய எனது கருத்தும் அவர்களது கருத்தும் நேரெதிராக உள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்புகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.

இது புதிய போர் அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. அவர்கள் வேறுபாட்டை காணும் இடங்களில் நான் ஒற்றுமையைக் காண்கிறேன். அவர்கள் வெறுப்பைக் காணும் இடங்களில் நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் எங்கு அச்சப்படுகிறார்களோ, அங்கு நான் ஆரத் தழுவுகிறேன்.

அந்த அன்பார்ந்த எண்ணம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பரவியுள்ளது. இத்தகைய இந்தியாவைத் தான் நாம் தீவிரமாக காக்க வேண்டியுள்ளது.

இந்தியா மீதும் இந்திய அரசியலமைப்பு மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் இந்தியா எனும் கருத்தாக்கத்தை அழிக்கும் நோக்குடன் உருவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் இருந்து நான் எப்படியும் பின்வாங்கப்போவதில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு நான் விஸ்வாசமுள்ள தொண்டன் மற்றும் இந்தியத் தாய்க்கு பற்று மிக்க மகன். என் கடைசி மூச்சு வரை இந்தியாவை காக்கவும், இந்தியாவுக்கும் தொண்டாற்றவும் என் இறுதி மூச்சு வரை படுபாடுவேன்.

நாங்கள் வலிமையாகவும்கண்ணியமாகவும் தேர்தலை எதிர்கொண்டோம். சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை மிக்கதாக எங்கள் பிரசாரம் அமைந்தது. பிரதமர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரை என் முழு பலத்தையும் திரட்டி எதிர்த்தேன். சில நேரங்களில் நான் அதில் தனியாக இருந்தேன். எனினும் அதுகுறித்து நான் பெருமைப் படுகிறேன். -BBC_Tamil

TAGS: