தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக இப்பத்தான் கண்டுபிடித்தார் மனோ!

சிறிலங்காவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாகவும் தெரிவித்துள்ள மனோ கணேசன், ஸ்ரீலங்கா அரசினால் ஏமாற்றப்பட்டதன் அதிருப்தியினால் தமிழ் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்களை ஊடகங்கள் திரிபுபடுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குச் சென்று யாராவது மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றியோ அல்லது தனிநாட்டு யோசனை குறித்தோ பேசினால் அவரை மக்கள் தடிகளைக் கொண்டு அடித்து விரட்டுவார்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் யூன் 30 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதற்கு எதிராக கடும் ஆத்திரம் வெளியிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் ஆயுதும் ஏந்தினாலா அரசியல் தீர்வை சிங்கள தலைமைகள் முன்வைக்கம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சம்பந்தனின் இந்தக் கருத்து தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான பின்னர் தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

மனோ கணேசன் நல்லிணக்க அமைச்சர் – அப்படியல்ல. திரிபுபடுத்த வேண்டாம். சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புக்கள் சுக்குநூறாகிவிட்டது. ஒரே நாட்டிற்குள் வாழ்வோம் என்கிற நிலைப்பாட்டிற்கு அவர் வந்தார். ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏன் ஏற்றார் என்றால் ஸ்ரீலங்கா ஆட்சிக்குள் தமிழ் மக்கள் வந்துவிட்டதை நாட்டிற்கு காண்பிப்பதற்காகவே அவர் அந்த பொறுப்பை ஏற்றார். எனினும் எவரும் அதனை உணரவில்லை. தனிநாடு தேவையில்லை, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆயுதங்களை கையிலெடுக்க மாட்டோம் என்றார். அவற்றை கைவிட்டு வந்தவருக்கு நாங்கள் என்ன கொடுத்தோம். ஒன்றையும் கொடுக்காமல் அவர்களை வெறுங்கையுடனேயே வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவைத்தோம். அதனால் சோர்வுற்று பேசியுள்ளார். இப்போதும்கூட அரசியல்வாதிகள் சோர்வுற்ற பின்னர், இந்த நாட்டை வெள்ளையர்கள் ஆட்சிபுரிந்திருந்தால் நலமாகியிருக்கும் என்று அதிருப்தியில் கூறுகிறார்கள். அதுபோலவே சம்பந்தன் கூறியதும் கலக்கமடைந்து அதிருப்தியில் கூறிய பேச்சாகும். இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று ஆயுதப் போராட்டமோ அல்லது தனிநாட்டு சிந்தனை குறித்து யாராவது பேசினால் தடிகளைக் கொண்டுதான் தாக்குவர்கள் என்பது நிச்சயம்”.

இதேவேளை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு தற்போது பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியாகிய போதிலும் மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என மைத்ரி சூளுரைத்து வருகின்றார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்றத்திற்கு அந்தத் தீர்மானத்தை முன்வைத்தால் மரண தண்டனை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்தை மாற்றியமைப்போம் என்று குறிப்பிட்டார்.

மரண தண்டனை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி கூறியிருப்பதோடு நேற்று எனது நிகழ்விலும் அதனையே குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் அதற்கெதிராக இப்போது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் பலவித சட்டதிட்டங்கள் நிபந்தனைகள் உள்ளன. அதனைமீறி அமுல்படுத்தினால் ஜி.எஸ்.பி.பிளஸ் உள்ளிட்ட பல சலுகைகள் இழக்க நேரிடும். அதற்கும் நாங்கள் முகங்கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி பிளஸ் பிளஸ் சலுகைகளை விட எமக்குத் தேவையாகதையே நாம் பார்க்கவேண்டும். இந்த நாட்டின் பொதுவான கருத்து என்னவென்றால் மரண தண்டனை வேண்டாம் என்பதாகும். மரணதண்டனை வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தாலும் சட்டங்களை நாடாளுமன்றமே உருவாக்குகின்றது. ஆகவே நாடாளுமன்றத்தில் முன்வைத்தால் அதனை மாற்றியமைக்க முடியும்”.

-athirvu.in

TAGS: