முகிலன் தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு!

சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நடந்தது என்ன?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார்.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்தார். சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனைதொடர்ந்து முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர பொலிஸிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது.

இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. பொலிசார், ஆந்திர பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று ஆந்திர பொலிசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி பொலிசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி பொலிசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். முகிலனை விடுவிக்கக்கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

-athirvu.in

TAGS: