மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது!

சிவா லெனின் | அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும். மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல், தடம் மாறி போகாமல், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் குரலாக ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் கட்சியாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) விளங்குகிறது என்றால் அஃதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இக்கட்சி சோசலிசச் சித்தாந்தத்தையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு, இந்நாட்டில் ஒடுக்கப்படும் மற்றும் அநீநிதிகள் இழைக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டிலுள்ள கட்சிகளில் 99 விழுக்காடு கட்சிகள் இனம், மதம் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து, அதுதான் தங்கள் கட்சியின் அரசியல் கொள்கை என மெய்ப்பித்து வருகிறார்கள்.

ஆனால், பி.எஸ்.எம். எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பையோ சார்ந்திருக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காக மட்டுமின்றி, இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தொடர்ந்து அது போராடி வருகிறது. பிற கட்சிகளைப் போல், அரசியல் விளம்பரத்தைக் கூட அந்நியமாக்கி, மக்களுக்காக உண்மையாக உழைக்கும் உன்னதக் கட்சியாக, இவ்வாண்டு 21-வது ஆண்டில் அது கால் பதிக்கிறது.

ஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், மக்களுக்காகப் போராடுவதும் அவர்களின் உரிமையை நிலைநிறுத்துவதுமே எங்களின் அரசியல்; எங்களின் அரசியல் மக்களுக்கானது, அது நாற்காலியைக் குறி வைத்தது அல்ல என்று பி.எஸ்.எம். முழங்கி வருகிறது. ஏற்றத் தாழ்வு இல்லாமல், இந்நாட்டில் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும், எல்லாரும் சரிநிகரே எனும் சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அஃது மிகையாகாது.

நாட்டில் கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால்கூட அதைப் பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் செய்தியாக்கி, அரசியல் இலாபம் தேடும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மத்தியில், நம் நாட்டில் எண்ணிலடங்கா மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் அதில் வெற்றியும் கண்டு, எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் பணியைச் சத்தம் இல்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் சொத்து விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்து அதனை அமல்படுத்திய முன்மாதிரியான கட்சியாக பி.எஸ்.எம். திகழ்கிறது. அக்கட்சியைச் சார்ந்து, கவுன்சிலர்களாக இருந்தவர்கள் கூட, தங்களின் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்பது வரலாறு. அன்றைக்கு அவர்கள் செய்ததைதான் அண்மையில் நாடாளுமன்றத்தின் தீர்மானமாக்கப்பட்டது.

சலிப்படையாதப் போராட்டவாதிகள்

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பி.எஸ்.எம். கட்சியின் முதன்மை முழக்கமாக இருந்து வரும் நிலையில், இந்நாட்டில் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமாக, பல போராட்டங்களைக் கையிலெடுத்து, இறுதிவரை ஒவ்வொரு தொழிலாளர் சார்ந்த பிரச்சனைகளிலும் தீர்வு கிடைக்கும் வரை தொழிலாளர் வர்க்கத்தின் அரணாக நிற்பதில் இக்கட்சி என்றுமே தனித்துவமாக திகழ்கிறது.

தொழிலாளர் வீட்டுடைமைத் திட்டம், மாதச் சம்பளக் கோரிக்கை, தொழிலாளர் வேலை நிறுத்த காப்புறுதி, குத்தகைத் தொழிலாளர் பிரச்சனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இலவச மருத்துவ வசதி, இலவசக் கல்வி, இன அரசியலுக்கு எதிர்ப்பு என பல்வேறு நிலைகளில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பி.எஸ்.எம். தனது களப்பணியினை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, மனித உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இக்கட்சி, நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (இசா), போக்கா போன்ற கொடூரச் சட்டங்களுக்கு எதிராகவும்; ஜி.எஸ்.டி போன்ற திட்டங்களுக்கு எதிராகவும் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டதனால், கட்சியில் பலர் சிறை வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் பொருத்தமட்டில், மக்களுக்காக போராடுவதும், அதனால் சிறை செல்வதும் வழக்கமான ஒன்றாகிப்போனது, அதில் அவர்கள் சலிப்படைவதும் இல்லை. மார்க்சின் பெயரைச் சொன்னால் இன்றைக்கும் உலக முதலாளிகளுக்கு அச்சம் கௌவிக்கொள்ளும். அதுபோல் மலேசியாவில், பி.எஸ்.எம். கட்சியின் பெயரைச் சொன்னால் முதலாளிகளுக்கும் அதிகார வர்க்க அரசாங்கத்திற்கும் பயம் பீறிட்டுக் கொள்ளும்.

தொழிலாளர்கள் பலம் தொழிற்சங்கம்

நாடு முழுவதும் எல்லாத் துறைகளில் தொழிற்சங்கத்தை உருவாக்குவது இக்கட்சியின் இன்றைய பெரும் செயல்பாடாக உள்ளது. தொழிலாளர்களின் உரிமைக்கு தொழிற்சங்கமே தக்க பலமாக இருக்க முடியும் என்பதை, பாதிக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளர்களிடமும் எடுத்துரைத்து அதனை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வரும் அவர்கள் அதன் முதற்கட்ட நகர்வாக, நாடு முழுவதுமுள்ள மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர் தொழிற்சங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். மேலும், லாரி ஓட்டுநர்களையும் தொழிற்சங்கத்தின் கீழ் மையப்படுத்த அதுசார்ந்த கூட்டமைப்பையும் உருவாக்கி, இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பூர்வக்குடிகள் நலன்

இந்நாட்டில் எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்படும், ஒடுக்கப்படும் ஓர் இனமாக பூர்வக்குடிகள் விளங்குகிறார்கள். அவர்களின் நிலம் பறிக்கப்படுவதும் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அந்த மக்களுக்கான உரிமை போராட்டங்களை அவர்களோடு கரம்கோர்த்து முன்னெடுத்ததில், பெரும் பங்கு பி.எஸ்.எம். கட்சிக்கு உண்டு.

நாட்டில் பூர்வீகம் அல்லது பாரம்பரிய கிராமங்கள் அழிக்கப்படும் போதெல்லாம், அங்கு வாழ்ந்த மக்களின் உரிமைக்காகப் போராடிய வரலாற்றில் பி.எஸ்.எம். தனது பங்கினை இனம், மதம் பாராமல் ஆற்றியுள்ளது. கடன் தொல்லையால் வீடுகள் ஏலத்திற்கு வரும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதும் இக்கட்சியினர்தான். நெகிரி செம்பிலான் கெட்கோ போராட்ட வரலாற்றை, பி.எஸ்.எம். கட்சியை ஒதுக்கிவிட்டு எழுதிட முடியாது. போராட்டக் காலக்கட்டத்திலும் சரி, இன்றும் சரி, அம்மக்களோடு களத்தில் நிற்பது பி.எஸ்.எம். மட்டும்தான். ‘போட்டோவுக்குப் போஸ்ட்’ கொடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மக்களை மறந்தது….. அதுவேறு கதை.

அந்நியத் தொழிலாளர்களும் அகதிகளும் மனிதர்கள்தாம்

இந்நாட்டு மக்களுக்காக மட்டுமின்றி, அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்காகவும் அகதிகளுக்காகவும் கூட பி.எஸ்.எம். தொடர்ந்து சோசலிச சிந்தனையின் அடிப்படையில், ஆக்கப்பூர்வப் பங்களிப்பினை செய்துகொண்டு வருகிறது. அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் பாதிப்படையும் போதெல்லாம் அவர்களின் குரலாக முதலில் ஒலிப்பது பி.எஸ்.எம்.-இன் குரல்தான்.

மலேசியாவில் மட்டுமின்றி, உலக ரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், அதற்கெதிரான கண்டனத்தைப் பதிவு செய்துவரும் இக்கட்சி, நாட்டில் நிலவும் இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிராகவும் வலுவான போராட்டங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மேற்கொண்டு வந்துள்ளது.

அரசியல் நண்பனைவிட, பாமர மக்களுக்கே முன்னுரிமை

ஆட்சியில் இருப்பது நண்பனாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்கள் உருவாக்கப்படும் போது அதனை எதிர்ப்பதில் ஒருபோதும் பி.எஸ்.எம் பின்வாங்கியதில்லை. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகவும் சரி, நடப்பு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராகவும் சரி, அவர்களின் நல்திட்டங்களை ஆதரிக்கவும் மக்களுக்குச் சுமையானவற்றை எதிர்க்கவும் ஒருபோதும் பி.எஸ்.எம். தயங்கியதில்லை.

பாரிசான் கூட்டணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என, தீவிரமாய் இயங்கிய பி.எஸ்.எம்., ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்த குறுகிய காலக்கட்டத்திலேயே, பிடிபிடிஎன் விவகாரம், இலவச மருத்துவத் திட்டம், இலவசக் கல்வி, மடமடவென உயர்ந்துவரும் வீடுகளின் விலை என பல்வேறு விவகாரங்களில் நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து தனது கருத்தினை வெளிப்படுத்தி வருவதோடு; அவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் போராட்டங்கள்

இதற்கு முன்னர், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் நசீர் ஹசிம் சிலாங்கூர், கோத்தா டாமான்சாரா (2008) சட்டமன்றத் தொகுதியிலும், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் பேராக், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் (2008 & 2014) மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

14-வது பொதுத் தேர்தலில், ஹராப்பான் கூட்டணியுடன் இணைந்து, சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனும் பி.எஸ்.எம். கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதோடுமட்டுமின்றி, அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களையும் ஹராப்பான் சார்ந்த கூட்டணி கட்சிகள் நிறுத்தின.

அத்தேர்தலில், இரு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வந்த டாக்டர் ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றம் வேண்டும், அம்னோ-தேசிய முன்னணிக்கு முடிவுக்கட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், மலேசியர்களும் மக்கள் சேவையில் சிறந்து விளங்கிய பி.எஸ்.எம். கட்சியினரைப் புறக்கணித்து ஹராப்பானுக்கு வாக்களித்தனர்.

தோல்விகளைக் கண்டு என்றுமே துவண்டு விடாமல், அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்வதே பி.எஸ்.எம். கட்சியின் தனித்துவமாக இதுவரை இருந்து வந்துள்ளது. இவர்களின் போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கானதுதான், இருந்தும் இவர்கள் ஏன் ஜனநாயகமுறையிலான தேர்தல்களில் தோல்வியைத் தழுவுகிறார்கள் எனும் கேள்வி அவ்வப்போது எழுந்தாலும்; அதற்கானப் பதில் ‘பி.எஸ்.எம். கட்சியின் தேர்தல் போராட்டங்கள் நாற்காலியைக் குறிவைத்து அல்ல – மக்களுக்கான நல் அரசியலை நோக்கி’ என்பதை மட்டுமே விடையாக கூற முடியும்.

நாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகளெல்லாம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அரசியல் விளம்பரத்தைத் தங்களின் இலாபத்திற்கான முதலீடாக வரையறுக்கிறார்கள். அந்த விளம்பரங்களில் மயங்கும் மக்களும், விளம்பரத்தில் ஏமாந்து வாக்களித்து விடுகிறார்கள். ஆனால், பி.எஸ்.எம். அத்தகைய விளம்பரத்தை கையில் எடுக்கவில்லை, ஒருபோதும் எடுக்கவும் எடுக்காது. அது நம்புவதெல்லாம் மக்களின் சிந்தனை மாற்றத்தை மட்டுமே.

அறுபது ஆண்டுகால அம்னோ தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள், நிச்சயம் ஒருநாள் சோசலிச சிந்தனையை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது இனங்களுக்கும் மதங்களுக்கும் வேலை இருக்காது, ஏற்றத்தாழ்வு குழித்தோண்டி புதைக்கப்பட்டிருக்கும். முதலாளித்துவத்தின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கும், எல்லாமே எல்லாருக்கும் எனும் சோசலிச சித்தாந்தம் உயிர்கொண்டிருக்கும். அத்தகைய சூழலின் உருவாக்கத்தை விதைத்த பெருமையும் வரலாறும் பி.எஸ்.எம். கட்சியைச் சார்ந்ததாகவே இருக்கும்.

அதுதான் அக்கட்சியின் இத்தனை ஆண்டுகாலப் போராட்டங்களின் உச்சகட்ட வெற்றியாகவும் சாதனையாகவும் இருக்க முடியும். விளைச்சலை கண்டு கவலைப்பட வேண்டாம், விதைத்துக் கொண்டே இருப்போம். முளைத்தால் மரம், இல்லையேல் உரம் எனும் உயரிய சித்தாந்தத்தோடு, பி.எஸ்.எம். நம் நாட்டில் அதன் மக்கள் பணியைத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பி.எஸ்.எம். மீது இளையர்கள் ஆர்வம் அதிகரிப்பு

நாட்டில் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் பி.எஸ்.எம். கட்சியை இன்றைய இளம் தலைமுறை, குறிப்பாக, உயர்க்கல்வி கூடம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிக அணுக்கமாக நெருங்க தொடங்கிவிட்டனர். இளம் தலைமுறையின் சிந்தனையும் அவர்களின் ஆழமான அரசியல் பார்வையும், நடப்பியல் சூழலில் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் அல்லது வஞ்சிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் விளங்கும் நிலையில்; மக்களுக்காக மட்டுமே உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.எம். கட்சிக்கு அவர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

அரசியலில் 21 ஆண்டுகள் என்பது நீண்டதொரு பயணம். முதலாளித்துவ சிந்தனையில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசிய அரசியலுக்கு முடிவுக்கட்டும் நாள் இனி விரைவில் வரும். அன்றைக்கு பி.எஸ்.எம். கட்சியின் சோசலிச சிந்தனை மக்களிடையே பற்றிக் கொள்ளும், அரசாங்கம் என்பது மக்களுக்கானதாய் இயங்கும்.

பி.எஸ்.எம். கட்சியின் மக்கள் போராட்டத்திற்கும் களப்பணிக்கும் நன்றி கூறிக்கொள்ளும் வேளையில், இன்று தொடங்கும் அதன் 21-வது தேசிய மாநாட்டிற்கு வாழ்த்தும் கூறிக் கொள்வோம்.

“ஓங்கட்டும் மக்கள் புரட்சி! வளரட்டும் சோசலிச சிந்தனை!!”