இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” – ரணில் விக்ரமசிங்க

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

”சஹ்ரானை சந்திக்காதவர்கள் சிலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் சென்றுள்ளனர். சஹ்ரான் தமிழ் மொழியில் போதனை செய்துள்ளமையினால், அது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, தென்னிந்தியாவிற்கும் அது பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. சஹ்ரானின் போதனை தென்னிந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தல், அதனால் அவர்களும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சஹ்ரானுடன் தேனீர் அருந்தியவர்கள்

இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாத செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக கூற முடியாது எனவும், அதுவொரு புற்றுநோயை போல வேறொரு இடத்தில் மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

சஹ்ரானின் போதனைகளை கேட்ட பலர், அவரது கொள்கைகளை நோக்கி தமது கவனத்தை செலுத்தியுள்ளமையினால், இந்த பயங்கரவாதம் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் சூழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள் உயிருடன் இருப்பார்களாயின், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றும் பலர் இன்றும் சமூகத்திற்குள் வாழ்ந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதனால், சஹரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்துமாறு தான் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக கூறிய பிரதமர், அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாட்டில் தற்போதுள்ள சட்டம் போதுமானதாக கிடையாது எனவும், பயங்கரவாத சட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் புதிய யுகமொன்றை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிட்டனில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டம் குறித்து ஆராய்ந்து, அவ்வாறான சட்டமொன்றை இலங்கையிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

தனிநபர் தாக்குதல்

சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றுவோர் நாட்டில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றமையினால், வேறு விதமான தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: "தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் சஹரான் செயற்பாடுகள்"

சஹ்ரானின் போதனைகளை கேட்டு, தமது மனதை மாற்றிக் கொண்டவர்கள், தனிநபர்களாக முன்வந்து தாக்குதல்களை நடத்த சாத்தியமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கத்தியால் வெட்டுதல், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் லாரிகளைக் கொண்டு மோதுதல் உள்ளிட்ட விதத்தில் தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டார்.

பயங்கரவாதம் ஒரு புற்றுநோய் போன்றது என கூறிய ரணில், அதனை முழுமையாக இல்லாதொழிக்க சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு

இலங்கை பாதுகாப்பு பொறிமுறையில் பிரச்சினை உள்ளதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஏற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு சபை உரிய முறையில் கூட்டப்படாமை, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அது குறித்து கவனம் செலுத்தப்படாமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் இந்த விடயத்தை ஏற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு சபை 1983ஆம் ஆண்டு முதல் வாராவாரம் கூடி வந்திருந்த நிலையில், இந்த ஆட்சிக் காலத்தில் அது உரிய முறையில் கூட்டப்படவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் பிரதமர் தலைமையில் பாதுகாப்பு சபை கூடியதாக தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியில் அது அவ்வாறு நடைபெறவில்லை எனவும் கவலை வெளியிட்டிருந்தார்.

எது எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கையில் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். -BBC_Tamil

TAGS: