எமது காணிகளை எம்மிடம் தந்துவிடுங்கள்; போராடத் தூண்டாதீர்கள்: மாவை சேனாதிராஜா

“இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை விடுவிக்கக் கோரி, போர்க் காலத்திலும் போர் முடிவுற்ற பின்னரும் பலநூற்றுக்கணக்கான போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். உயர் நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளோம். எனவே எங்கள் காணிகளை எங்களிடம் தந்து விடுங்கள். மீண்டும் எங்களை போராடத்தூண்டாதீர்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித்துறைமுகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே, மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஆண்டு மயிலிட்டித்துறைமுகம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மயிலிட்டித்துறைமுகமானது பிரேமதாச பிரதமராக இருந்தபோது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது.

இப்பிரதேசத்திலிருந்து 300 தொடக்கம் 400 தென் கடலுணவுகள் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு சென்ற வரலாறுள்ளது. கடந்த 30 வருட காலமாக இந்த முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. இப்பிரதேசம் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது 75 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறைமுகமானது இன்று திறக்கப்படுகின்றபோதும், இப் பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவதன் மூலம் தான் இந்தத் துறைமுகம் முழுமையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த மண்ணுக்குச் சொந்தக் காரர்கள் இடம்பெயர்ந்த நிலையிலேயே தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். இந்த மயலிட்டித்துறைமுகத்தை கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கும்போது நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் இந்தப் பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தேன். அன்றைய தினமே இதற்குரிய நடவடிக்கை எடுத்ததாக வாக்குறுதியளித்தார். எனினும் இன்னும் நடைபெறவில்லை.

இங்கு கடமையில் இருக்கின்ற இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தளபதி மக்களின் காணிகளை விடுவிப்பதில் உணர்வுபூர்வமாகவே இருந்தார்கள். எனினும் இன்னும் சாத்தியப்படவில்லை. இந்த நிகழ்விலும் பிரதமரிடம் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவே வாக்குறுதி தந்துள்ளார்.

வடபகுதியில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் பல காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. இவற்றை விடுவித்துத்தருமாறு பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசுவதற்குக நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

இந்தத் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது. மூன்று கட்டமாக புனரமைப்பு நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு பகுதிகளும் விரைவாக புனரமைப்பு செய்யப்படவேண்டும்

இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இப் பகுதியில் இராணுவ மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக காணிகளை அபகரிக்கவுள்ளதாக அறிவித்தல்களை விடுத்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். நாங்கள் இது தொடர்பில் பேசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் போர்க் காலதிலும் போர் முடிவுற்ற பின்னரும் பலநூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளோம். எனவே எங்கள் காணிகளை எங்களிடம் தந்து விடுங்கள் மீண்டும் எங்களை போராடத்தூண்டாதீர்கள்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: