வட கொரியா மேலும் 2 ஏவுகணை விட்டு சோதனை: தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை முறிந்ததாக அறிவிப்பு

தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

“தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே” இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் என்றும் வட கொரியா கூறியுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில்தான் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா தனது இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.

கிம் ஜோங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகிம் ஜோங்-உன்

வட கொரியா சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு, இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவியது.

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. -BBC_Tamil