கூட்டமைப்பிற்கு விடுதலைப்புலிகளின் கதையை சொல்லி பாடமெடுத்த கருணா!

இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத்பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு அன்று வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு சொன்னார்கள்.

ஆனால் அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபஷசவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) கட்சியின் பெண்கள் அணித்தலைவி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர் அணி தலைவர், தேசிய அமைப்பாளர்களுக்கான பதவிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது ஜனபெரமுன கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். அதன் தெளிவாக்கல் கூட்டம் இன்று இடம்பெற்றதுடன் இறுதி தீர்மானமாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஸவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.

கடந்த 21 ம் திகதி முஸ்லீம் பயங்கரவாதிகளினால் தற்கொலை குண்டு தாக்குதலினால் 200க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் முதலாவதாக எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியான அச்சுறுத்தல் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே இது போன்ற அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பது எங்களது முக்கிய கடமையாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பல வாக்குறுதிகளை அள்ளி வீசியதால் மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர் ரணிலாக இருக்கலாம் ஜனாதிபதி மைத்திரியாக இருக்கலாம் அவர்கள் வழங்கிய ஒருவாக்குறுதியில் ஒரு அரசியல் கைதியைக்கூட விடவில்லை. ஆனால் மாறாக அரசியல் யாப்பு திருத்தப்படும் வடக்கு கிழக்கிற்கான உரிமைகள் வழங்கப்படும் என கூறிக் கொண்டார்களே தவிர எதுவித வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறன அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து எமது தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்த ஏமாற்றிய அரசாங்கத்திற்கு இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

ஜக்கிய தேசிய கட்சி இன்று வரை வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. இருந்தபோதும் சஜித் பிரேமதாஸாவை தெரிவு செய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த சஜித் முஸ்லீம்களை பாதுகாப்பதற்கான தலைவராக தான் இருப்பார்.

அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இடம்பெறும் கூட்டங்களிலே பல முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலே வெற்றியடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முஸ்லீம் முதல் அமைச்சரை உருவாக்கினர். இந்த முதலமைச்சர் காலத்தில் தான் கூடுதலான நிலங்கள் பறிபோயுள்ளது அதேவேளை தமிழ் மக்கள் வேலை வாய்ப்பையும் இழந்தார்கள்.

அதே போல இன்றும் ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் முஸ்லீம்களிடம் கிழக்கு மாகாணத்தை கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கனம் கட்டி நிற்கின்றனர்

இன்று இதற்கு பல வியாக்கியானங்கள் கூறலாம் கோத்தபாய யுத்ததிலே ஈடுபட்டவர் யுத்தகுற்றவாளி என கூறலாம். ஆனால் யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அன்று இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத் பென்சேக்காவிற்கு எதுவித முன் நிபந்தனையும் இல்லாமல் வாக்களிக்கச் சொன்னவர்கள் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயராஜபஷசவுக்கு வாக்களிக்க முடியாதா? யாராக இருந்தாலும் ஒரு சிங்களவர் தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார். எனவே தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நான் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்துகொண்ட காலத்தில் அன்ரன் பாலசிங்கம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே வெளிப்படையாக தெரிவித்தார். ரணில் ஒரு குள்ள நரி என்று எனவே ரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார்.

அவர் அந்த நரித்தனத்தை தான் தற்போது காட்டிவருகின்றார் அவரின் பின்னால் நாங்கள் அணிதிரள்வோமாக இருந்தால் மீண்டும் எங்கள் தமிழ் பிரதேசங்கள் இழந்த பிரதேசங்களாக மாற்றப்படும் முஸ்லீம் அரசியல் ஆதிக்க வெறியாட்டம் அதிகரிக்கும்.

எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தெளிவாக கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும என்றார்.

-athirvu.in

TAGS: