அமேசான் தீ விபத்துக்கு பிரேசில் அதிபரே காரணம்!

பிரேசிலில் அமேசான் காடுகளில் கடந்த 48 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தேசிய விண்வெளி ஆய்வு மையம் எடுத்த படங்களின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமேஸான் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இவற்றில் 51 விழுக்காட்டிற்கும் அதிகமான தீ விபத்து அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமேசான் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோவே முக்கிய காரணம் என சுற்றுச்சூழியல் ஆய்வாளர்கள் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளனர். கடந்த காலங்களை விட நடப்பாண்டு வெப்பநிலை குறைவாக இருந்ததாகவும், அமேசான் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடும் அவர்கள் அமேசான் காடுகளில் இயற்கையாக தீப்பிடிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக நிலம்தேவை என்று குறிப்பிட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனாரோ, கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு தீ விபத்து சராசரிக்கும் சற்று குறைவாக இருப்பதாக தனது முகநூலில் கருத்துக் கூறியிருப்பது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

-athirvu.in