ஆட்சி மாறியும்  அனாதைகளா நாம்? – இராகவன் கருப்பையா

ஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை.

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு  கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தியர்கள் என்ற  4 அமைச்சர்களால் நாம் பெருமைப்படுவது ஒருபுறமிருக்க, அவர்களால் சமுதாயம் எவ்வாறு பயனடைகிறது என்பதுதான் முக்கியம். அல்லது 4 அமைச்சர்கள் கொடுத்தால் அவர்கள் தலையில் அந்த சுமாயை நாம் போட வேண்டுமா? என்ற வினாவுக்கும் விடை தேட வேண்டும்.

ஒரு சில சமயங்களைத் தவிர்த்து ஆண்டாண்டு காலமாக  ஒரே ஒரு இந்தியர்தான் ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்ற நினைப்பில் முழு அமைச்சராக இருந்து வந்துள்ளார் என்பது வரலாறு.

இந்நிலையில் 4 அமைச்சர்களின் உதயம் நமது பிரச்னைகளுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் தீர்வு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையை உண்டு பன்னியது.

ஆனால்…..அந்த நால்வரையும் எங்கே, எப்போது, எப்படி காண்பது, தொடர்பு கொள்வது என்ற தடுமாற்றம்தான் இப்போது நமது சமுதாயத்தின் அவல நிலை.

அதனைத் தவிர்த்து பிரதமர் இலாகாவில் இயங்கி வந்த ‘செடிக்’ என்னும் அமைப்பு இப்போது பக்காத்தான் ஆட்சியில் ‘மிட்ரா’ என பெயர் மாற்றம் கண்டுள்ளது.

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு என்னும் பொருளைக் கொண்டுள்ள இந்த ‘மிட்ரா’, பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியின் பார்வையில் செயல்படுகிறது – மகிழ்ச்சியான விசயம்தான்.

வேதமூர்த்தி மிட்ராவை சற்று விரிவுபடுத்தி இதர 3 அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து ஒரு பொதுவான செயலகத்தை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராய வேண்டும்.

பாமர மக்கள் சுலபத்தில் தொடர்பு கொள்ளும் அளவில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் முதலிய மாநிலங்களில் கிளை அலுவலகங்களை அமைக்கவேண்டும்.

அதோடு 34 இந்திய நாடாளுமன்ற உறுப்பிணர்களும் சட்ட மன்ற உறுப்பிணர்களும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட  இந்தியர்கள் நிலை குறித்த ஆலோசனை சபை (Indian Advisory Affairs Council) மீண்டும் கூடி செயல்பட வேண்டும். இவர்களிடையே இருக்கும் வேற்றுமைகளுக்கு அப்பால் சாதிக்க முடிந்த சில சமூக சிக்கல்கலையாவது  களைய முன்வரவேண்டும்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இவர்கள் அதிரடியாக மேற்கொள்ளவில்லையென்றால் அவர்கள் மீதான மக்களின் மரியாதையும் நம்பிக்கையும் சரிந்துவிடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.